விபத்துக்கு முன் 500 அடி உயரத்தில் பறந்ததா டெல்லி விமானம்?
டெல்லி: விபத்தில் சிக்கிய டெல்லி பாதுகாப்பு படை விமானம், 500 அடி உயரத்தில் பறக்கும் போது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி விமான நிலையம் அருகே நேற்று முன்தினம் எல்லை பாதுகாப்பு படைக்கு சொந்தமான பீச்கிராப்ட் பி200 என்ற விமானம் விபத்துக்குள்ளானது. இதில், அந்த விமானத்தில் பயணம் செய்த 10 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த விபத்து. விபத்தில் சிக்கிய விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே பாதியில் டெல்லிக்கு திரும்பியதாகக் கூறப்படுகிறது.
விபத்துக்குள்ளான பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட விமானி அறையில் உள்ள குரல் ஒலிப்பதிவுக் கருவி(Cockpit Voice Recorder) ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானம் 500 அடி உயரத்திற்கு மேல் பறந்த போதே விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துவிட்டதாக சிவில் போக்குவரத்து அமைச்சக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதோடு, விமானத்தின் என்ஜின் செயலிழந்ததாகவும், அதனாலேயே விமானி இடதுபுறமாக விமானத்தை திருப்பியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை.
தொடர்ந்து இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விமானியின் அறையில் இருந்த ஒலிப்பதிவுக் கருவி மூலம் கடைசி நேரத்தில் என்ன நடந்தது குறித்து தெரிய வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.