கோவா அருகே மூழ்கவிருந்த வர்த்தக கப்பலை உரிய நேரத்தில் காப்பாற்றிய இந்திய கடற்படை
மும்பை: நீர் புகுந்து விட்டதால் கடலில் மூழ்கவிருந்த வர்த்தக கப்பலை தக்க நேரத்தில் விரைந்து சென்று மூழ்காமல் காப்பாற்றியுள்ளனர், இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை வீரர்கள்.
குஜராத் மாநிலம் கன்ட்லா துறைமுகத்தில் இருந்து கர்நாடக மாநிலம் கார்வார் துறைமுகத்திற்கு 1750 டன் எடைகொண்ட தரைப்பூச்சு உபகரணங்களுடன் வர்த்தக கப்பல் ஒன்று வந்து கொண்டிருந்தது. சுமார் 89 மீட்டர் நீளம் கொண்ட அந்த கப்பலில் 14 ஊழியர்கள் இருந்தனர்.
நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில் கப்பல் கோவா கடல் பகுதியிலிருந்து 20 நாட்டிகல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது, கப்பலில் உடைசல் ஏற்பட்டு, நீர் உள்ளே புகுந்தது. எவ்வளவோ முயன்றும் முழு நீரையும் வெளியேற்ற முடியவில்லை.
இதுகுறித்து கடல்படைக்கு தகவல் கிடைத்ததும், திரிகன்ட் கப்பல் விரைந்தது. 9 மணிக்கெல்லாம் வர்த்தக கப்பலை நெருங்கிய கடற்படையினர், அதிநவீன மோட்டார் பம்ப்புகள் மூலம் நீரை வெளியேற்றினர். தேவைப்பட்டால் உதவவி செய்வதற்காக ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் அதற்கு அவசியம் ஏற்படாத வகையில் நீர் வெளியேற்றப்பட்டது.
இதையடுத்து குறைந்த வேகத்தில் கப்பல் கார்வார் நோக்கி இயக்கப்படுகிறது. அதற்கு கடற்படை கப்பலும் துணைக்கு வந்து கொண்டுள்ளது. இன்று இரவுக்குள் அந்த கப்பல் கார்வார் துறைமுகத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோசமான வானிலைக்கு நடுவேயும், துணிச்சலாக கடற்படை கப்பல் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூழ்கவிருந்த கப்பலையும், அதில் இருந்தவர்களையும் காப்பாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.