ஐஎஸ் தீவிரவாதிகளிடம் சிக்கியுள்ள 39 இந்தியர்களும் பத்திரம்- மத்திய அரசு
டெல்லி: ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடந்த ஆண்டு கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் பத்திரமாக இருப்பதாக மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.
39 இந்தியர்களும் மொசூல் நகரில் வைத்து தீவிரவாதிகளால் பிணை கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இவர்களின் நிலை குறித்து பல்வேறு நபர்கள் மூலம் விசாரித்ததில் அனைவரும் நலமாக இருப்பதாகவும், விரைவில் இவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் லோக்சபாவில் அளித்த பதிலில், தொடர்ந்து இவர்களது நிலையை மத்திய அரசு கண்காணித்து வருகிறது. ஈராக் அரசுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம். இவர்களின் இருப்பிடம், பாதுகாப்பு குறித்த தகவல்களை தொடர்ந்து அறிய முயன்ற வருகிறோம்.
எங்களுக்குக் கிடைத்த மூன்றாவது தரப்பு தகவல்களின்படி அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களைக மீட்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்றார்.
இன்னொரு கேள்விக்கு பதிலளித்த அவர், பாக்தாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்திடமிருந்து கிடைத்த தகவலின்படி அனைவரும் மொசூல் நகரில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
குர்திஸ்தான் தன்னாட்சிப் பகுதியில் மூத்த இந்திய அதிகாரிகள் குழு முகாமிட்டு அரசுத் தரப்புடனும், தீவிரவாதிகள் தரப்புடனும் பேசி இந்தியர்களை மீட்க முயன்று வருகிறது என்றார் அவர்.
கடந்த ஆண்டு ஜூன் 11ம் தேதி மொசூல் நகரில் வைத்து 40 இந்தியர்களை தீவிரவாதிகள் பிடித்துச் சென்றனர். பின்னர் ஹர்ஜீத் மஷி என்பவர் மட்டும் தப்பி வந்தார். அவர், மற்ற 39 பேரையும் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று விட்டதாக கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.