அரசு உதவித் தொகைக்கு ஆசைப்பட்டு... கணவர் இருக்கும்போதே விதவை நாடகமாடிய கவுன்சிலர்!
ஹைதராபாத்: ஆந்திராவில் அரசு உதவித் தொகை பெறுபவதற்காக கணவர் உயிருடன் இருக்கும் போதே விதவை நாடகமாடிய கவுன்சிலரை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். இப்பெண் கவுன்சிலர் கடந்த பத்தாண்டுகளாக விதவைகளுக்கான பென்சன் தொகையைப் பெற்று வந்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இதில் 35-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் ஒய்.எச்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த புத்தூர் நாகராஜம்மா (36). இவர் அரசு உதவித்தொகை பெறுவதற்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் குழுவின் தலைவியாகவும் பதவியில் இருந்துள்ளார்.
நாகராஜம்மாவின் கணவர் உயிருடன் உள்ளபோதும், அரசு உதவித் தொகையை பெரும் நோக்கில் அரசுக்குத் தயார் செய்த பட்டியலில் தனது பெயரையும் சேர்த்து விதவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் தகுதியானவர்களின் பெயர் பட்டியலை நகராட்சி அதிகாரிகளிடம் கையெழுத்து பெற்று, மேலதிகாரிகளுக்கு அனுப்பிய நாகராஜம்மா, கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக மாதம் தோறும் ரூ. 200 ஐ அரசு உதவித் தொகையாகப் பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவி ஏற்றதும், விதவை உதவித்தொகையை ரூ.1,000 ஆக உயர்த்தி உத்தரவிட்டார்.
இதனால், உதவித்தொகை பெறுவதற்கு தகுதியானவர்களின் பட்டியலை மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்து வேறு பட்டியல் அனுப்புமாறு சம்பந்தப் பட்டவர்களுக்கு அரசு அறிவுறுத்தியது. எனவே, தொடர்ந்து உதவித் தொகை பெறும் ஆசையில் மீண்டும் தனது பெயரை பட்டியலில் சேர்த்து நகராட்சி அதிகாரிகளின் கையொப்பம் பெற்று அரசுக்கு அனுப்பினார்.
ஆனால், நாகராஜம்மா கணவர் உயிருடன் இருக்கும்போதே தன்னை விதவை என்று தவறான தகவலை கொடுத்து அரசு உதவித்தொகை பெற்று வருவதாக, 35-வது வார்டு பொதுமக்கள் நகராட்சி தலைவர் ராதாரெட்டியிடம் புகார் தெரிவித்தனர்.
இப்புகாரின் பேரில் ராதாரெட்டி பட்டியலை ஆய்வு செய்தபோது, கடந்த பத்து ஆண்டுகளாக நாகராஜம்மா விதவை உதவித் தொகை பெற்று வந்தது அம்பலமானது. அதைத்தொடர்ந்து, கவுன்சிலர் நாகராஜம்மாவுக்கு விதவை உதவித்தொகை வழங்குவதை உடனடியாக நிறுத்தும்படி, அரசுக்கு நகராட்சி தலைவர் ராதாரெட்டி பரிந்துரை செய்துள்ளார்.
மேலும், கணவர் இருக்கும்போதே தன்னை விதவை என்று தவறான தகவலை கொடுத்து, அரசின் விதவை உதவித்தொகையை கடந்த 10 ஆண்டுகளாக பெற்று வந்த நாகராஜம்மா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராதாரெட்டி தெரிவித்துள்ளார்.