இனிமேல் எப்போதும் பணத்தை மக்கள் பதுக்கமாட்டார்கள் - டீமானிடைசேஷன் ஐடியா குரு அனில் போகில்
இனி பணத்தை பதுக்க மக்கள் யோசிப்பார்கள் என்று பேட்டியளித்து இருக்கிறார் அனில் போகில்.
டெல்லி : மத்தியில் ஆளும் மோடி அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவித்து ஓர் ஆண்டு நிறைவடைந்துவிட்டது. இதை மத்திய அரசு கருப்புப் பண ஒழிப்பில் மிக முக்கிய நடவடிக்கையாக பார்க்கிறது.
கடந்த ஆண்டு இதே நாள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை நள்ளிரவில் அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டில் புழக்கத்தில் உள்ள 500, 1000 ரூபாய்களை ஒரே நேரத்தில் செல்லாதவை என்கிற முடிவு நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அடுத்த நாளில் இருந்து மக்கள் ஏ.டி.எம், வங்கி வாசல்களில் நின்றதை இப்போது யாரும் மறந்திருக்க முடியாது.
அந்த ஒரே அறிவிப்பால் 86% நோட்டுகள் செல்லாமல் போகின. நாட்டின் பொருளாதாரத்திற்காக சீரமைப்பிற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது. இத்தனை பெரிய திட்டத்திற்கான ஐடியாவிற்கு காரணம் ஒரே ஒரு ஆள். அவர் தான் அனில் போகில். அவரின் இந்த ஐடியாவைத் தான் அமல்படுத்தி இருக்கிறார் மோடி. ஒரு வருடம் கடந்த நிலையில். ஆங்கிலப் பத்திரிகைக்கு அனில் போகில் பேட்டி அளித்து இருக்கிறார்.
பணத்தடை என்று சொல்லுங்கள்
பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்று சொல்லக்கூடாது. இதைப் பணத்தடை என்று தான் கூற வேண்டும். இந்தியாவிற்கு இது மிகத்தேவையான நடவடிக்கை. சராசரி மக்களின் ஒரு நாள் வருமானம் 50 ரூபாய் என வைத்துக்கொண்டாலும் இன்னமும் 30% கீழான மக்கள் வறுமைக்கோட்டில் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு 100 ரூபாய் நோட்டே அதிகபட்சமான ஒன்று தான். ஆனால், 500 மற்றும் 1000 ரூபாய் பணக்காரர்களிடம் மட்டுமே இருக்கிறது. அதை ஊழலுக்கும், கருப்புப் பண பதுக்கலும் மட்டுமே பயன்படுத்திவருகிறார்கள். இப்போது அந்த நோட்டுகள் செல்லாதவை ஆகிவிட்டதால் அவர்களிடம் இருக்கும் பணத்துக்கு மதிப்பு இல்லை.
நடைமுறைப்படுத்திய விதம் வேறு
நான் கொடுத்த ப்ரஷண்டேசனில் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை வேறு விதத்தில், மெதுவாக அமல்படுத்தும் விதங்களை பரிந்துரைத்து இருந்தேன். ஆனால், அரசு வேறு விதத்தில் அதை நடைமுறைப்படுத்தி விட்டது. எப்படி இருந்தாலும் அதுவும் ஒருவகையில் நல்லது தான். கருப்புப்பணம் ஒழிப்பும், கள்ளநோட்டும் தான் எங்களது இலக்கு. இன்னும் சிறிது நாட்களில் இதுகுறித்த புள்ளி விபரங்களை வெளியிடும் போது மக்கள் அதை தெரிந்துகொள்வார்கள்.
கேஷ்லெஸ் இந்தியா ஆகிவிட்டதா?
டிஜிட்டல் இந்தியா என்பது அரசின் முடிவு. எல்லா பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் முறைக்கு வந்துவிட்டால் கருப்புப் பணத்தை பதுக்க முடியாது. எல்லாம் கணக்குகளுக்குள் வந்துவிடும். நாங்கள் டேக்ஸ்லெஸ் இந்தியா அதாவது வரிகள் குறைந்த இந்தியா என்கிற திட்டத்தை முன்வைத்தோம். அதுதான் இந்தியா போன்ற பெரிய நாடுகளுக்கு எளிதான திட்டம். இதை வங்கி பரிமாற்றங்கள் மூலம் வசூலிக்கும் போது, வங்கிகளும் லாபம் அடையும் , அரசுக்கும் லாபம் வரும்.
2000 ரூபாய் அவசியம் தேவையா
2000 ரூபாய் நோட்டுகள் தற்போதைய இந்த இடைவெளியை நிரப்புவதற்காகவே அறிமுகப்படுத்தப்பட்டது. விரைவில் நிலைமை சீராகிவிடும். தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கூட, 2 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை நோட்டுகள் அடிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றே அரசு தகவல் வெளியிட்டு உள்ளது. தேவை இருந்தால் 500 நோட்டுகளுக்கு கூட தடை விதிக்கலாம். இனி மக்கள் யாரும் ரூபாய் நோட்டுகளை பதுக்க யோசிப்பார்கள் என்று அனில் போகில் தெரிவித்து உள்ளார்.