எமெர்ஜென்சி மூலம் மக்களின் வாழும் உரிமையை பறித்த காங். சகிப்பின்மை பற்றி பேச கூடாது: ஜேட்லி ஆவேசம்
டெல்லி: எமர்ஜென்சி நிலையை கொண்டுவந்த காங்கிரசுக்கு, சகிப்புத்தன்மை பற்றி பேச அருகதையில்லை என்று ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
ராஜ்யசபாவில் இன்று நடைபெற்ற அரசியலமைப்பு தொடர்பான விவாதத்தின் போது நிதி அமைச்சர் ஜேட்லி கூறியதாவது: அம்பேத்கரை அரசியலமைப்பை சட்டத்தை உருவாக்கிய சிற்பியாக மட்டுமின்றி, சமூக சீர்திருத்தவாதியாகவும் பார்க்க வேண்டும்.

1975ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரநிலையை ஒப்பிட்டால், இன்று நாம் எவ்வளவோ பாதுகாப்பான ஒரு நிலையில் உள்ளோம். எமெர்ஜென்சியின்போது, மக்கள் உயிர்வாழும் உரிமையை கூட இழந்தனர். ஆர்டிகிள் 21ல் மக்களுக்கு வாழும் உரிமை வழங்கப்பட்டு்ள்ளது. இதை, சஸ்பெண்ட் செய்தது இந்திராகாந்தி அரசு.
எனவே வாழும் உரிமையை பறித்தது காங்கிரஸ் அரசு. ஆனால் இன்றோ, யாரோ ஒருவர் டிவியில் தனது கருத்தை கூறினால் அது சகிப்பற்றத்தன்மை என்று கூறப்பட்டுவிடுகிறது.
மொராஜி தேசாய் மற்றும் அவரது அரசுதான், ஆர்டிகிள் 21ல் திருத்தம் கொண்டுவந்து அதை சஸ்பெண்ட் செய்ய முடியாதபடி மாற்றியமைத்தது. காங்கிரஸ் ஆட்சியில்தான் ஆர்டிகிள் 356 (மாநில அரசை கலைப்பது) பலமுறை தவறாக பயன்படுத்தப்பட்டது. இப்போதுதான், அந்த நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 65 வருடங்களில் ஜனநாயகம் வலுப்படுத்தப்பட்டே வந்துள்ளது. இன்றைய அரசியமைப்பில் முக்கிய சவால் தீவிரவாதம். நாட்டில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிக்கு தண்டனை கொடுத்தால், அவனையும், தியாகியாக உருவகப்படுத்த ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு அருண் ஜேட்லி பேசினார்.












Click it and Unblock the Notifications