காவிரி வழக்கில் கர்நாடகாவுக்கு பின்னடைவு.. பெங்களூரில் நள்ளிரவு வரை 144 தடையுத்தரவு! போலீஸ் குவிப்பு
பெங்களூர்: காவிரி வழக்கு இன்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்ததால், பெங்களூர் உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வாழும் கர்நாடக பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக தீர்ப்பு வெளியானால் மீண்டும் வன்முறை ஏற்படலாம் என மக்கள் பீதி அடைந்திருந்தனர். எனவே பெங்களூரு, மைசூரு, மண்டியா நகரங்களிலும் கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைப் பகுதிகளிலும் இன்று நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு, மண்டியா, மைசூரு ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரில் தமிழர்கள் அதிகமாக வாழும் மாகடி ரோடு, சிவாஜிநகர், விவேக்நகர், அல்சூர், கோரமங்களா, பேட்டராயனபுரா, சாம்ராஜ்பேட், ஸ்ரீராமபுரம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை அக்டோபர் 4ம் தேதிக்குள் அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதால் பதற்றம் அதிகரித்துள்ளது. எனவே போலீசார் முழு வீச்சில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள்.