பீகார் 2–ம் கட்ட சட்டசபை தேர்தல்: 32 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு!!
பாட்னா: பீகாரில் 2வது கட்ட சட்டசபை தேர்தல் நாளை 32 தொகுதிகளில் நடைபெற உள்ளது. மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் இவ்வாக்குப் பதிவு நடைபெறுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பீகாரில் 243 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 12-ந் தேதியன்று முதல் கட்டமாக 49 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 57% வாக்குகள் பதிவாகின.
இதையடுத்து 2வது கட்ட தேர்தல் நடைபெறும் 32 தொகுதிகளிலும் நேற்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.
இந்த 32 தொகுதிகளிலும் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த 32 தொகுதிகளுமே மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள இடங்களாகும்.
ஆகையால் 11 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப் பதிவு மாலை 3 மணியுடன் நிறைவடைந்துவிடும். மேலும் 12 தொகுதிகளில் மாலை 4 மணியுடன் வாக்குப் பதிவு நிறுத்தப்படும். எஞ்சிய தொகுதிகளில் மாலை 5 மணிவரை வாக்குப் பதிவு நடைபெறும்.
நாளைய 2வது கட்ட தேர்தலில் மொத்தம் 456 வாக்காளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 32 பேர் பெண்கள். மொத்தம் 86,13, 870 வாக்காளர்கள் நாளை வாக்களிக்க உள்ளனர். நாளைய தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் முன்னாள் முதல்வர் மாஞ்சி போட்டியிடும் இமாம்கஞ்ச் தொகுதியும் ஒன்று. இத்தொகுதியில் 5 முறை எம்.எல்.ஏ.வாக வென்ற ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த சபாநாயகர் உதய் நாராயண் செளத்ரியுடன் மாஞ்சி மோதுகிறார்.
நாளைய வாக்குப் பதிவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளில் துணை ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதன் பின்னர் வரும் 3-வது கட்டமாக 28-ந்தேதி 6 மாவட்டங்களில் உள்ள 50 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. நவம்பர் 1-ந்தேதி 4-ம் கட்டமாக 55 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.
இறுதியாக 5-ம் கட்டமாக தேர்தல் நவம்பர் 5-ந்தேதி 57 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறும். அனைத்து வாக்குகளும் 8-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.