சர்ச்சைக்குரிய சபீர் அலியை கட்சியில் இருந்து நீக்கியது பாரதிய ஜனதா!
ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., அண்மையில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை புகழ்ந்திருந்தார். இதனால் அவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் பாரதிய ஜனதா கட்சியில் நேற்று இணைந்தார். ஆனால் பாரதிய ஜனதாவில் சபீர் அலியை சேர்க்க கடும் எதிர்ப்பு எழுந்தது.
பாஜகவின் துணைத் தலைவரான முக்தார் அப்பாஸ் நக்வி, தீவிரவாதி யாசின் பட்கலின் கூட்டாளிதான் சபீர் அலி. தலிபான் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர். இன்று அவரை சேர்த்தால் நாளை தாவூத் இப்ராகிமை சேர்ப்பீர்களா? என்று கொந்தளித்தார்.
இதேபோல் பாஜகவின் மூத்த தலைவர்கள் பலரும் சபீர் அலியை கட்சியில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் சபீர் அலியை சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
இதனால் நொந்து போன சபீர் அலி, தம் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை தமது உறுப்பினர் சேர்க்கையை பாஜக நிறுத்தி வைக்கலாம் என்று கூறிப் பார்த்தார். இந்தநிலையில் சபீர் அலியை கட்சியில் சேர்ப்பதை கைவிட்டதாக பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் இதனை தெரிவித்தார்.