காஷ்மீர்: பாஜக ஆதரவு திடீர் வாபஸ்- முதல்வர் மெகபூபா அதிரடி ராஜினாமா! ஆளுநர் ஆட்சிக்கு பரிந்துரை
காஷ்மீர் மெகபூபா முஃப்தி தலைமையிலான அரசு கவிழும் நிலை உருவாகி உள்ளது.
Recommended Video
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கான ஆதரவை பாஜக இன்று திடீரென விலக்கிக் கொண்டது. இதையடுத்து முதல்வர் மெகபூபா முஃப்தி தமது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார். இதனால் அம்மாநில ஆளுநர் எம்.என்.வோரா, காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலாக்குமாறு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பரிந்துரைத்துள்ளார்.
87 எம்.எல்.ஏக்களைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 2014-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மக்கள் ஜனநாயகக் கட்சி 28; பாரதிய ஜனதா கட்சி 25; தேசிய மாநாட்டு கட்சி 15; காங்கிரஸ் 12 இடங்களில் வெற்றி பெற்றன.
காஷ்மீரில் பெரும்பான்மையை 45 எம்.எல்.ஏக்கள் ஆதரவு. இதனால் 2014-ம் ஆண்டு ஆட்சி அமைவதில் 3 மாதங்கள் இழுபறி நீடித்தது. இதனைத் தொடர்ந்து மக்கள் ஜனநாயகக் கட்சியும் பாஜகவும் இணைந்து ஆட்சி அமைத்தன. மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவர் முப்தி முகமது சையது முதல்வரானார். பாஜகவின் நிர்மல்குமார் சிங் துணை முதல்வரானார்.
2016-ம் ஆண்டு உடல்நலக் குறைவால் முப்தி முகமது சையது காலமனார். அவர் மறைவைத் தொடர்ந்து புதிய முதல்வராக மெகபூபா முஃப்தி உடனடியாக பதவியேற்கவில்லை.
இதையடுத்து காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அப்போது ஜம்மு காஷ்மீரில் ஆயுதப் படை சட்டத்தை திரும்பப் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் மெகபூபா முஃப்தி.
இதில் இழுபறி நீடித்ததால் காஷ்மீரில் புதிய அரசு அமைவதில் சிக்கல் ஏற்பட்டது. மீண்டும் சில மாதங்களுக்கு பின் மெகபூபா முஃப்தி முதல்வரானார். அவர் பதவி ஏற்றது முதலே பாஜகவுடன் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன.
இதன் உச்சகட்டமாக ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு காஷ்மீரில் அறிவிக்கப்பட்ட யுத்த நிறுத்தத்தை மத்திய அரசு வாபஸ் பெற்றது. இதை மெகபூபா முஃப்தி விரும்பவில்லை. இப்படி அதிருப்தி நீடித்த நிலையில் காஷ்மீர் பாஜகவினரை டெல்லிக்கு வரவழைத்தார் அமித்ஷா.
இந்த ஆலோசனையின் முடிவில் மெகபூபா அரசுக்கான ஆதரவை பாஜக வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டது. பாஜக இந்த முடிவை அறிவித்த உடனேயே காஷ்மீர் முதல்வர் பதவியை மெகபூபா முஃப்தி ராஜினாமா செய்தார்.
தமது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலாக உள்ளது.
தற்போதைய நிலையில் மெகபூபா அரசு கவிழும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதேநேரத்தில் தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் ஒற்றுமை என்கிற முழக்கம் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் கர்நாடகாவைப் போல காங்கிரஸ் மெகபூபாவை அதிரடியாக ஆதரிக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதனால் அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் உருவாகி உள்ளது.