நமக்குள் இருக்கு பாருங்க ஒரு குழந்தை.. வெளியே கொண்டு வாங்க.. ஜாலியா இருங்க!
சிகாகோ: இன்று குழந்தைகள் தினம். ஜாலியா குழந்தைகளோடு கொண்டாடுகிறோம் இல்லையா. அது சரி குழந்தைகள் தினம் என்றதும் உங்களுக்கு என்ன ஞாபகம் வருகிறது? குழந்தைகள் தினம் கொண்டாடுற வயசா இது என்று கேட்கிறீர்களா? அது சரி தான். ஆனால்....
எவ்வளவு பெரியவர்களாய் வளர்ந்தாலும் கூட ஏன் நமக்கே ஒரு குழந்தை பிறந்து நாம் ஒரு அம்மாவாக அப்பாவாக ஆனாலும் கூட நமக்குள் ஒரு குழந்தை இருந்துகொண்டே தான் இருக்கிறது.
அந்த குழந்தைதனத்தை குடும்ப பொறுப்பு, கடமை, அலுவலகம், வேலை, தொழில், சமுதாயம் என்று எல்லாமும் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைத்து விடுகிறது. எப்பப் பார்த்தாலும் நான் ஒரே பிஸி என்று ஓடிக்கொண்டு இல்லை இல்லை ரெக்கை கட்ட்டிக் கொண்டு பறந்து கொண்டிருக்கிறோம்.
ஆனா சில தருணங்களில் தான் நமக்கே தெரியாமல் நம் குழந்தைத்தனம் வெளியே வரும். அது எப்போது தெரியுமா?
மீண்டும் சிறுவனாகலாம்
முதலில் நாம பள்ளிப்பருவ நண்பர்களை சந்திக்கும்போது அல்லது தொலைபேசியில் பேசும்போது தான் அது. இப்பொழுது நமக்கு அலுவலகத்தில் அதிக நண்பர்கள் இருக்கலாம். ஆனாலும் அந்த பள்ளிப் பருவ சிறு பருவ நண்பர்கள்கிட்ட பேசும்பொழுது மட்டும் நம்மை அறியாமல் நமக்குள் ஒரு உற்சாகம் வந்து ஒட்டிக் கொள்ளும். நண்பன் நம்மை எதெற்கெடுத்தாலும் ஒட்டு ஓட்டு என்று ஓட்ட நீ வேற இல்ல மச்சி என்று நாம் சொல்ல அங்க ஒரே மச்சி மச்சி தான். அது போன்ற சந்திப்புகள் பேச்சுகள் நாம் எவ்வளவு டென்ஷன் இருந்தாலும் அது எல்லாவற்றையும் மறக்க வைத்து நம்மை அந்த பழைய காலத்துக்கு தூக்கி சென்று நம்மை மீண்டும் சிறுவனாக்கும்.
குழந்தைகள் செய்யும் அதிசயம்:
அலுவலகம் விட்டு பையோடு கோபம் டென்ஷனோடு உள்ளே வரும் அப்பா தன் மனவியைக் கண்டால் சில நேரம் உர்ரென்று முகம் வைத்திருப்பார் அல்லது சில நேரம் ஒரு சின்னப் புன்னகை விரியலாம். ஆனால் அவர் காலை ஓடி வந்து கட்டி கொள்ளும் மகளைக் கண்டால் எப்படி இருக்கும் அவர் முகம். அத்தனைப் பல்லும் தெரிய செல்ல மகளே என்று ஆஹா ஓஹோவென்று கொஞ்சத் தொடங்குவார். அல்லது அப்பா என்று தாவி வரும் மகன் அப்பா என்று உரக்க கத்துவதுற்கு ஏற்ப அவரும் ஹே என்று உற்சாகமாக குதிப்ப்பார். அப்படியே அந்த தருணத்தில் இன்னொரு குழந்தையாக மாறி இருப்பார். இது தான் குழந்தைகள் செய்யும் அதிசயம்.
குழந்தைகளின் உலகம்:
குழந்தைகளோடு ஐந்து நிமிடம் இருந்து பேசினால் போதும். அவர்கள் நம்மை பைசா செலவில்லாமல் அந்த சொர்க்கத்துக்கு சுற்றுலா கூட்டிச் செல்வார்கள். இல்லாத கதைகள் சொல்லுவார்கள். அவர்களின் கதை அழகு. அவர்களின் கற்பனை உலகம் அழகு. அவர்களை மொழி அழகு. அவர்கள் சொல்லும் விதம் அழகு. அவர்களின் உலகத்துக்குள் நாம் பிரவேசிக்கும் போது நம் பொழுதுகள் அழகு. அவர்களின் கேள்விகள் அழகு. சில நேரம் கேள்வி கேட்டு கேட்டு காதை குடைந்து அவர்கள் கொடுக்கும் தொல்லை கூட அழகு. சில நேரம் பதில் சொல்ல தெரியாம நாம முழிப்பது கூட அழகு தான்.
குழந்தைகளோடு குழந்தையாதல்:
குழந்தைகளோடு கண்ணாமுச்சி விளையாடுவது, பந்து விளையாடுவது, அதில் நாம ஜெயிக்கும் போது குழந்தை உதடு பிதுங்க நம்மைப் பார்ப்பது பொறுக்காமல் அந்த குழந்தைக்காக நாம தோற்றுபோவது போல நடிப்பது பின் அந்த நடிப்பை நம்பி அந்த குழந்தை க்ளுக் க்ளுக் என்று சிரிக்க அந்த மழலைச் சிரிப்பில் நாம் குலுங்கி குலுங்கி சிரிக்க அந்த வீடே சந்தோஷமாகி அழகாகும் நம் தருணங்கள். இந்த குழந்தைகள் இறைவனின் கொடை. அவை நம்மை அம்மாவாக்கி அப்பாவாக்கி பொறுப்பை தலையில் ஏற்றி அவ்வப்போது நம்மை குழந்தையாக்கி சிரிக்க வைத்து வாழ்வை ரசிக்க சொல்லி தரும் அரும்புகள்.
அழகாகட்டும் நம் பொழுதுகள்:
டேய் கொஞ்ச நேரமாவது சும்மா இருடா என்று நம்மை கெஞ்ச வைக்கும் சுறு சுறு குழந்தைகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்துகள். குழந்தைங்க கூட ஜாலியா இந்த குழந்தைகள் தின விழாவைக் கொண்டாடுங்க. அவ்வப்போது நமக்குள் இருக்கும் குழந்தையை உயிர்த்தெடுப்போம்.வாழ்க்கையை அழகா வாழ்வோம். இச் இச் என்று குழந்தைகள் இனிக்க இனிக்க தரும் முத்தத்திலும் அந்த அழகு சிரிப்பிலும் வாய் மூடாத பேச்சிலும் நம் பொழுதுகள் இன்னும் இன்னும் அழகாகட்டும்.
- Inkpena சஹாயா