வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆயுள் கால விசா- சட்டதிருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆயுள்கால விசா வழங்குவதற்காக குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்த போது நியூயார்க்கில் இந்தியர்களிடையே உரையாற்றுகையில், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு அதிகபட்சம் 15 ஆண்டுகால விசா மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் அவர்கள் இந்தியா வரும்போதும் காவல் நிலையங்களுக்குச் சென்று தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதும் நடைமுறையில் உள்ளது. இந்த 2 விதிமுறைகளும் தளர்த்தப்படும் என்று உறுதியளித்திருந்தார்.
இதையடுத்து இந்த விதிமுறைகளை நீக்கி திருத்தப்பட்ட குடியுரிமை அவசரச் சட்டம் கடந்த மாதம் 6-ந் தேதி கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் அவசரச் சட்டதுக்கு மாற்றாக குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்களின் கோரிக்கையான இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதற்கான பி.ஐ.ஓ அட்டை (PIO) மற்றும் வெளிநாட்டுக்கான இந்திய குடியுரிமை ஓ.சி.ஐ. (OCI) அட்டை ஆகிய இரண்டு திட்டமும் ஒன்றாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் அடுத்த வாரம் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.