முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்ட கேப்டன் வருண்சிங்! மக்கள் கண்ணீர் அஞ்சலி
போபால் : நீலகிரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான கேப்டன் வருண்சிங் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
வெலிங்டன் அருகே காட்டேரி வனப்பகுதியில் டிசம்பர் 8ம் தேதி நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயம் அடைந்த வருண்சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் பலி
டிசம்பர் 8ம் தேதி கோவை மாவட்டம் சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து முப்படைகளின் தளபதி பிபின்ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், கேப்டன் வருண்சிங் மற்றும் 11 ராணுவ வீரர்கள் ஆகியோர் ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். அவர்கள் பயணம் செய்த ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் வெலிங்டன் அருகே காட்டேரி வனப்பகுதியில் விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவருக்கும் அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டு உடல்கள் தகனம் மற்றும் நல்லடக்கம் செய்யப்பட்டது.

படுகாயங்களுடன் வருண்சிங் மீட்பு
இந்த விபத்தில் சிக்கிய ராணுவ குரூப் கேப்டன் வருண்சிங் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவு அளிக்கப்பட்டு வந்த நிலையில் கேப்டன் வருண்சிங் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதை அடுத்து அவரது உடல் பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் போபாலுக்கு கொண்டு வரப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

அரசு, ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு
இதை அடுத்து ஹெலிகாப்டர் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆனது. இதனால் ஹெலிகாப்டர் விபத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று கேப்டன் வருண்சிங் உடல் ராணுவ வாகனத்தில் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதன்பின் குடும்பத்தினரின் இறுதிச் சடங்குகளுக்குப் பின் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. பொது மக்கள் கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்தனர்.
இதனிடையே கேப்டன் வருங்கிற்கு முழு அரசு மற்றும் ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுஹான் நேற்றே அறிவித்திருந்தார். மேலும் கேப்டன் வருண்சிங் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் எனவும் மத்திய பிரதேச முதல்வர் அறிவித்திருந்தார்.

கேப்டன் வருண்சிங் யார்?
குரூப் கேப்டன் வருண்சிங் மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர். இவர் 2003ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு அகாடமியில் பட்டம் பெற்றுள்ளார். பின்னர் 2004ம் ஆண்டு வருண்சிங் போர் விமானத்தின் விமானியாக நியமிக்கப்பட்டார். இவர் ஜாகுவார் மற்றும் தேஜாஸ் போன்ற அதி நவீன போர் விமானங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் வருண்சிங்கிற்கு இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று சவுரிய சக்ரா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. கடைசியாக அவர் பாதுகாப்பு சேவைகளுக்கான பணியாளர் கல்லூரியில் பயிற்சி தருபவராக நியமிக்கப்பட்டிருந்தார். கேப்டன் வருண்சிங்கிற்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications