சன் டைரக்ட்டில் மேக்சிஸ் முதலீடு பற்றி கலாநிதி மனைவி காவேரிக்கு தெரியுமா? சிபிஐ நீதிமன்றம் கேள்வி
டெல்லி: சன் டைரக்ட் நிறுவனத்தில் 82% பங்குகளை வைத்திருக்கும் கலாநிதி மாறனின் மனைவி காவேரிக்கு மேக்சிஸ் முதலீடு பற்றி தெரியுமா என்று சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த சிவசங்கரனுக்கு சொந்தமான ஏர்செல் நிறுவனம், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமம் கோரி விண்ணப்பித்தது. அப்போது தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பல காரணங்களை கூறி உரிமம் வழங்கவில்லை.
பின்னர் மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல்லின் பங்குகள் விற்கப்பட்ட நிலையில் ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கப்பட்டது. இதில் மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல்லின் பங்குகளை விற்றாக வேண்டும் என்று அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், சிவசங்கரனை மிரட்டினர் என்பது புகார்.
குற்றப்பத்திரிகை தாக்கல்
இதன் மூலம் தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதிக்கு சொந்தமான சன் டி.டி.எச்சில் மேக்ஸிஸ் நிறுவனம் பல நூறு கோடி முதலீடு செய்தது என்பதும் குற்றச்சாட்டு. சிபிஐ விசாரித்து வந்த இந்த வழக்கில் பல ஆண்டுகாலமாக இழுத்தடிக்கப்பட்ட நிலையில் அண்மையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
தயாநிதி, கலாநிதி..
இதில் தயாநிதி, கலாநிதி, மேக்சிஸ் அனந்தகிருஷ்ணன் உட்பட 4 பேர் மற்றும் 4 நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
1,000 பக்கங்கள்..
சுமார் 1,000 பக்கங்களைக் கொண்ட இந்தக் குற்றப்பத்திரிகையில், 76 பக்கங்களில் குற்றச்சாட்டுகளை விளக்கும் முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.
151 பேர் சாட்சி
இந்த வழக்கில் 151 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் சிபிஐ தெரிவித்திருந்தது.
இன்று விசாரணை
இந்த குற்றப்பத்திரிகை மீது இன்று டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
சம்மன்?
இந்த விசாரணையின் முடிவில் குற்றப்பத்திரிகையை ஏற்று தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்படும் என்று தெரிகிறது.
காவேரி கலாநிதி
அப்போது, சன் டைரக்ட் நிறுவனத்தில் 82% பங்குகளை வைத்திருக்கும் கலாநிதி மாறனின் மனைவி காவேரிக்கு மேக்சிஸ் முதலீடு பற்றி தெரியுமா? என்று சிபிஐக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த சிபிஐ தரப்பு வழக்கறிஞர், நீதிமன்றம் உத்தரவிட்டால் காவேரி கலாநிதியிடமும் விசாரணை நடத்த தயார் என்று தெரிவித்தார்.
எப்படி அனுமதி?
மேலும், பொருளாதார விவகாரங்கள் அமைச்சரவை குழுவின் ஒப்புதல் இல்லாமல் ரூ600 கோடி முதலீட்டு அனுமதி எப்படி அளிக்கப்பட்டது என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
ப.சி. பங்கு
மேக்சிஸ் முதலீட்டுக்கு அனுமதி கொடுத்த போது நிதி அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். அவரது பங்கு குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அக்.13க்கு
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை வரும் அக்டோபர் 13-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.