காவிரி: குழுவா? வாரியமா? கடைசி நேரத்தில் உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்கும் மத்திய அரசு
காவிரி வழக்கில் உள்ள தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது குழுவா இல்லை வாரியமா என தெளிவுப்படுத்த மத்திய அரசு மனுதாக்கல் செய்துள்ளது.
Recommended Video
டெல்லி: காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பில் பிறப்பித்த உத்தரவில் திட்டம் என குறிப்பிட்டுள்ளது குழுவா இல்லை வாரியமா என சந்தேகத்தை விளக்க வேண்டும் என்று மத்திய அரசு மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.
சுமார் 200 ஆண்டுகளாக காவிரி விவகாரம் நீடித்து வருகிறது. மத்தியில் எந்த தலைமையிலான ஆட்சி வந்தாலும் சரி காவிரி பிரச்சினை என்பது இடியாப்பச் சிக்கலாகவே இருந்தது.
இந்நிலையில் கடந்த 2007-இல் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை எதிர்த்தும் கூடுதல் நீர் கேட்டும் தமிழகம், கர்நாடகம், புதுவை, கேரளம் ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த விவகாரத்தில் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
6 வாரங்களுக்குள் உத்தரவு
அதில் காவிரி நீரை பகிர்வது தொடர்பாக நடுவர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை காட்டிலும் தமிழகத்துக்கு குறைந்த அளவிலான நீரே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் காவிரி நீரை ஒழுங்குமுறைப்படுத்த ஒரு திட்டத்தை மத்திய அரசு 6 வாரங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகம் மறுப்பு
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் திட்டம் என்பது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் அது காவிரி மேலாண்மை வாரியம் என்றுதான் இருக்க வேண்டும் என்றில்லை என்று கூறும் கர்நாடக அரசு கூறுகிறது.
காவிரி விவகாரம்
கர்நாடக சட்டசபை தேர்தல் மே மாதம் நடைபெறவுள்ளதை அடுத்து காவிரி விவகாரத்தில் அந்த மாநிலத்தை பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு, காவிரி மேற்பார்வை குழுவை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நேரம் இல்லை
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் அங்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க அனைத்து கட்சி பிரதிநிதிகளும் பிரதமரை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு பிரதமர் நேரம் கொடுக்கவில்லை.
கர்நாடக மறுப்பு
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் போது கடந்த 15-ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்ற தீர்மானம் தமிழக சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன. அதுபோல் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் ஏற்படக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றினர்.
கெடு முடிவு
இந்நிலையில் உச்சநீதிமன்றம் விதித்துள்ள கெடு நாளை முடியவுள்ளது. இந்த நேரத்தில் காவிரி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டம் என்பது குழுவா அல்லது வாரியமா என்று சந்தேகம் உள்ளதாகவும் அதை நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி காவிரி வழக்கில் விளக்கம் கேட்டு மனுவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.