எதுக்கு வெட்டிச் செலவு? - சட்டசபை, லோக்சபா தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த மத்திய அரசு முடிவு
டெல்லி: அரசிற்கு ஏற்படும் செலவு மற்றும் கால விரயத்தை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களை நடத்தலாமா என மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை நடத்துவது குறித்து பெரும்பான்மையான தரப்பினர் ஆதரவு அளித்துள்ளனர்.
இது தொடர்பாக நாடாளுமன்ற சட்டம் மற்றும் பணியாளர் கமிட்டி கடந்த ஆண்டு டிசம்பரில் தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது.

அரசியல் கட்சிகள் விவாதம்:
இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளிடமும் கேள்வி பட்டியல் தயாரித்து கொடுக்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டுள்ளன. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருந்த போதிலும் அது சாத்தியமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.
செலவும், கால விரயமும்:
சாத்தியம் எனில் செலவு மற்றும் கால விரயத்தை தவிர்க்கும் வகையில் ஒரே நேரத்தில் அனைத்து தேர்தலையும் நடத்தி முடிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. மக்களின் விருப்பம் மற்றும் எனது விருப்பமும் கூட அதுதான். ஒரே நாளில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டும்.
பிரதமரின் வேண்டுகோள்:
அடுத்த ஒரு வாரத்திற்குள் உள்ளாட்சி தேர்தல்களையும் முடித்து விடலாம். இந்த விவகாரத்தை அனைத்து அரசியல் கட்சிகளிடமும் எடுத்து சென்று விவாதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தில் நிறைவேறுமா?:
ஜிஎஸ்டி மசோதாவுக்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறது. ஏப்ரல் 25 இல் தொடங்கும் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதியில் இது நிறைவேற்றப்படுமா என்பது குறித்து தற்போது கூறுவதற்கில்லை என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications