மக்கள் உஷாராகிட்டாங்க.. இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக, கோக கோலா திண்டாட்டம்
Recommended Video
டெல்லி: இந்தியாவில் முதல் முறையாக கோககோலா நிறுவனம் சங்கடத்தை உணர ஆரம்பித்துள்ளது. சுமார் 200-250 பேரை வேலையை விட்டு நீக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது என்று பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி கூறுகிறது. அதுகுறித்த விவரம் இதுதான்.
இந்தியாவின் முன்னணி பன்னாட்டு குளிர்பான கம்பெனிகளில் ஒன்று, கோககோலா நிறுவனம். இந்த நிறுவனத்தில் பணியாற்றும் சீனியர் மற்றும் மத்திய தர அதிகாரிகள் சுமார் 250 பேர் இப்போது வேலையிழக்க உள்ளனர்.
நிதிப்பிரிவு, மனிதவள பிரிவுகளில் பணியாற்றியவர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாற்று திட்டம்
கார்பொரேட் அலுவலகங்களின் கிளைகளை குறைத்துக் கொண்டு விற்பனை மற்றும் சப்ளை சங்கிலியை பலப்படுத்த கோககோலா திட்டமிட்டுள்ளது. எனவே குறைந்த சம்பளத்தில் உள்ள பணியிடங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
தொடர்ந்து மூடப்படும் ஆலைகள்
கோககோலாவின் இந்த முடிவுக்கு காரணம், அதன் உற்பத்தி மையங்கள் பலவும் கடந்த இரு வருடங்களில் மூடப்பட்டு வருவதுதான். புதிதாக உற்பத்தி மையங்களை அமைக்கும் இடங்களில் உள்ளூர் மக்களும் விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
சமீபத்தில் மூடப்பட்டவை
கடந்த 2 வருடங்களில், அசாமின் ஜோர்காட், மேகாலயாவின் பைர்னிஹாட், ஜெய்ப்பூர், விசாகபட்டினம், தெலங்கானாவின் மவுலா அலி, கர்நாடகாவின் ஹொஸ்பேட் ஆகிய இடங்களில் இயங்கிய கோககோலா நிறுவன உற்பத்தி மையங்கள் மூடப்பட்டுள்ளன.
மக்களிடம் விழிப்புணர்வு
இந்தியாவில் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. இயற்கையை பேணுவது குறித்த விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வெளிநாட்டு பானங்களுக்கு எதிராக இளைஞர்கள் ஆர்ப்பரித்ததால் தமிழகத்தில் பன்னாட்டு குளிர்பான விற்பனை குறைந்தது. அதேபோல இந்தியா முழுக்கவும் மேல்தட்டு மக்கள், ஆரோக்கிய பானங்களை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர்.
இன்னும் லாபம்தான்
இதுபோன்ற காரணங்களால் கோலா உற்பத்தியாளர்கள், விற்பனை சரிவை சந்தித்து வருகிறார்கள். தற்போது நாடு முழுக்க கோககோலா நிறுவனத்திற்கு 21 ஆலைகள் உள்ளன. 2017ம் ஆண்டில் மார்ச் மாத நிலவரப்படி, கோககோலா நிறுவன வருவாய் ரூ.9,472 கோடியாக இருந்தது.