குடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக வேட்பாளரை கழகங்கள் ஆதரிக்குமா…. ?
பா. கிருஷ்ணன்
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் கூட்டணி சார்பில் யார் நிறுத்தப்படுவார். எதிர்க்கட்சிகள் சேர்ந்து பொதுவேட்பாளரை நிறுத்துமா என்ற கேள்வி இன்னும் விவாதப் பொருளாகவே இருக்கிறது.
இந்நிலையில், ஆளும் பாஜக கூட்டணி நிறுத்தும் வேட்பாளரை அண்ணா திமுகவின் இரு அணிகளுமே ஆதரிக்கத் தயாராகிவிட்டன. யார் வேட்பாளர் என்பதைப் பற்றிக் கவலைப்படாமலே இந்த முடிவை இரு அணிகளும் எடுத்துவிட்டதாகத் தெரிகிறது. அதற்கு மத்திய அரசின் குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியின் ஆசி தேவைப்படுவதுதான் காரணம்.
திமுக மாநிலங்களவை உறுப்பினரும் திமுக தலைவர் மு. கருணாநிதியின் மகளுமான கனிமொழி, "குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான அரசு அனைவரும் ஏற்கும் வகையிலான வேட்பாளரை நிறுத்தினால் பரிசீலிக்க முடிவு" என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, "எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளோம்" என்றும் அவர் குறிப்பிட்டிருப்பதை ஒதுக்கிவிட முடியாது.
அன்று நடந்தது போல்
ஒருவேளை அப்படி அமைந்தால், 1977ம் ஆண்டும், 2002ம் ஆண்டும் நடந்ததுபோல ஆளும் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் இணைந்து ஆதரிக்கும் வேட்பாளர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு அமையும். அதைப் போல கனிமொழி கூறுவதை அவரது கட்சி ஏற்றுக் கொண்டு முடிவெடுத்தால், கழகங்கள் இணைந்து ஒரே வேட்பாளரை ஆதரிக்கும் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படலாம். இதைப் போல் 1982ம் ஆண்டு இதைப் போல் குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்திருக்கிறது.
அரசியல் காரணம்?
கனிமொழி இப்படிக் கூறுவதற்கு அரசியல் காரணம் இருக்குமோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. 2ஜி அலைக்கற்றை வழக்கில் தீர்ப்பு ஜூலை 15ம் தேதி கூறப்பட இருக்கிறது. இந்நிலையில், பிரதமர் மோடியுடன் இணக்கமாகப் போனால், ஏதாவது அரசியல் ஆதாயம் கிடைக்கலாம் என்ற கோணத்திலும் திமுகவின் புதிய அணுகுமுறையைக் கவனிக்கத் தோன்றுகிறது.
கச்சைகட்டும் கட்சிகள்
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத இடைவெளி இருக்கிறது. எதிர்க்கட்சிகள் கச்சை கட்டிக் கொண்டு யாரை நிறுத்தலாம் என்று முனைப்புடன் இருக்கின்றன. ஆனால், எந்த வேட்பாளரின் பெயரும் ஊகமாகக் கூட வெளியாகவில்லை. அது மட்டுமல்ல, பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக யார் நிறுத்தப்படுவார் என்று ஆளும் தரப்பினரும் முடிவு செய்யவில்லை.
மமதா சந்திப்பு
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசியிருக்கிறார். சில தினங்கள் முன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி சந்தித்துப் பேசியிருக்கிறார். மோடியைச் சந்தித்த மம்தா பானர்ஜி மாநிலத் திட்டங்களுக்காகச் சந்தித்ததாகக் கூறியிருக்கிறார். ஆனால், பாஜகவும் எதிர்க்கட்சிகளும் ஏற்கும் வேட்பாளரை நிறுத்தலாம் என்ற யோசனையைக் கூறியதாக யூகங்கள் பரவுகின்றன.
எடப்பாடி சந்திப்பு
அதைப் போல் எடப்பாடி கே. பழனிச்சாமியும் மாநில அரசின் சார்பில் பல கோரிக்கைகளை எடுத்துரைக்கவே பிரமதரைச் சந்தித்ததாக நிருபர்களிடம் கூறினாலும், குடியரசுத் தலைவர் தேர்தலில் மோடி நிறுத்தும் வேட்பாளரை ஆதரிப்பதாக அவர் தெரிவித்தார் என்று பேசப்படுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தல்களில் போட்டிகள் நடைபெற்றாலும் ஆளும் கட்சியின் சார்பில் நிறுத்தப்படுபவரே தேர்ந்தெடுக்கப்பட்டு குடியரசுத் தலைவராக வருவது வழக்கம். பல ஆண்டுகளுக்கு முன் நாட்டை ஆண்டுகொண்டிருந்த காங்கிரஸ் கட்சியே மாநில சட்டப் பேரவைகளிலும் பலம் பெற்று ஆட்சி புரிந்து கொண்டிருந்ததால், அது சாத்தியமாகவே இருந்தது.
சஞ்சீவ ரெட்டி
1969ம் ஆண்டு மட்டும் கட்சித் தலைவர்கள் எடுத்த ஒருமித்த முடிவை அடுத்து நிறுத்தப்பட்ட நீலம் சஞ்சீவ ரெட்டி வாய்ப்பை இழந்தார். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மனசாட்சிப்படி வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொண்டதால், நிலைமை மாறியது. அப்போது தமிழகத்தை ஆட்சி செய்த திமுக இந்திராவின் விருப்பத்தின்படி வி.வி. கிரிக்கே வாக்களித்தது. அவரே குடியரசுத் தலைவரானார்.
ஃபக்ருதீன் அலி அகமது
அதையடுத்து, ஃபக்ருதீன் அலி அகமது திடீரென்று மறைந்ததை அடுத்து, 1977ம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் நீலம் சஞ்சீவ ரெட்டி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழக கட்சிகள்
தமிழகத்தில் திமுக ஆதரிக்கும் அணியை அண்ணா திமுக ஆதரிப்பதில்லை என்பது பொதுவான நிலையாக இருந்தாலும், 1982ம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட கியானி ஜைல்சிங்கை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே ஆதரித்தன. ஜனதா கூட்டணி நிறுத்திய வேட்பாளர் தோல்வியுற்றார்.
அப்துல் கலாம்
2002ம் ஆண்டு நடந்த தேர்தலில் வாஜ்பாய் ஆதரவில் விஞ்ஞானி அப்துல் கலாம் நிறுத்தப்பட்டார். அவருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ஆதரவு தந்தார். இடதுசாரிகள் நிறுத்தி வேட்பாளர் வெற்றி பெறவில்லை.
அதிமுக, திமுக
தற்போதும் நரேந்திர மோடி நிறுத்தப் போகும் வேட்பாளரை ஆதரிப்பதற்கு அதிமுக, திமுக இரு கட்சிகளும் மனத்தளவில் தயாராகிவிட்டனவோ என்று தோன்றுகிறது. இத்தனைக்கும் யார் வேட்பாளர்கள் என்று அறிவிக்கப்படாத நிலையிலும் அவை தயாராக இருப்பது வியப்பு தருகிறது.
பிரணாப் முகர்ஜி
பிரணாப் முகர்ஜியை மீண்டும் நிறுத்தலாம் என்ற யோசனை கூறப்பட்டாலும், அதற்கு அவர் தயாராக இல்லை. அவரும் மனநிறைவுடன் ஓய்வு பெறுவதை விரும்புகிறார். எது எப்படியோ புதிய குடியரசுத் தலைவரிடம் வித்தியாசமான அணுகுமுறையை நாடு எதிர்பார்க்குமா என்பது ஜூலை மாதத்துக்குப் பின் தெரிந்துவிடும்.