ஆர்.டி.ஐ அம்பலப்படுத்தியும் அசராத பெங்களூர் சிறை அதிகாரிகள்.. சசிகலாவுக்காக விதிமுறைகள் வளைப்பு
பெங்களூர்: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா விஷயத்தில் பெங்களூர் சிறை அதிகாரிகள் இன்னும் முழுமையாக தங்களை திருத்திக்கொள்ளவில்லை. விதிமுறைகளுக்கு மாறாக அவருக்கான சலுகைகள் போய்க்கொண்டுள்ளன.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பனஅக்ரஹாரா பகுதியிலுள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பிப்ரவரி 14ம் தேதி முதல் இவர்கள் பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள அதிகாரிகள் துணையோடு சசிகலாவுக்காக விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.

சலுகை மழை
வெளியில் இருந்து உணவு கொண்டு செல்வது, அதிகப்படியான பார்வையாளர்களை அனுமதித்தது, குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகும் சிறைக்குள் பார்வையாளர்களை அனுமதித்தது, உள்ளிட்ட பல முறைகேடுகள் நடந்ததாக ஆர்.டி.ஐ ஆர்வரல் நரசிம்ம மூர்த்தி கண்டுபிடித்து ஊடகங்களுக்கு தகவல் அளித்தார். இந்த செய்திகள் வந்த பிறகு, சிறைத்துறை நிர்வாகம் கெடுபிடிகளை அதிகரித்தது.

பெரும்பாலும் கிடையாது
ஆனால் இதெல்லாம் கொஞ்ச காலம்தான். நைசாக இப்போது சிறை அதிகாரிகள் சசிகலா அன்டுகோவுக்கு சலுகைகளை வாரி வழங்க ஆரம்பித்துள்ளனர். அதேநேரம், சில விஷயங்களில் மட்டும் ரூல்சை மதிக்கிறார்கள். பெரும்பாலான விஷயங்களில் கோட்டை விட்டுள்ளனர்.

ஆர்.டி.ஐ தகவல்
மார்ச் 20 முதல் மே 31ம் தேதிவரையிலான சிறை நடவடிக்கை குறித்து நரசிம்ம மூர்த்தி ஆர்.டி.ஐ மூலம் சேகரித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் சசிகலாவை 11 முறை வெளியிலிருந்து வந்த நபர்கள் சந்தித்துள்ளனர். இளவரசியை ஐந்து முறையும், சுதாகரனை இரு முறையும் சந்தித்துள்ளனர்.

சசிகலாவுக்கு மட்டும்
விதிமுறைப்படி இந்த இரண்டரை மாத காலத்தில், சசிகலாவை 5 முறைதான் பார்வையாளர்கள் சந்திக்க அனுமதித்திருக்க வேண்டும் என குற்றம்சாட்டுகிறார் நரசிம்ம மூர்த்தி. இளவரசி மற்றும் சுதாகரனுக்கு மட்டுமே இதில் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளதாகவும், சசிகலா விஷயத்தில் அது காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

சில விதிமுறைகளில் ஸ்டிரிக்ட்
அதே நேரம் முன்பு போல மாலை 6.40 மணியளவில் எல்லாம் சசிகலாவை சந்திக்க பார்வையாளர்களை அனுமதித்த நிலை மாற்றப்பட்டு, இப்போது மாலை 5 மணிக்குள்ளாக மட்டுமே பார்க்க அனுமதித்துள்ளனர் அதிகாரிகள். அதில் மட்டும் விதிமுறையை அவர்கள் பின்பற்றியுள்ளனராம். சசிகலா சாதாரண சிறை தண்டனை அனுபவிப்பதால் சிறைக்குள் அவர் எந்த வேலையும் பார்க்க வேண்டியதில்லை. வெளியில் இருந்து கொண்டு செல்லப்படும், உணவு சாப்பிட அனுமதி கிடையாது என ஆர்.டி.ஐ கேள்விக்கு சிறை நிர்வாகம் பதிலளித்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications