கேரள அரசு-ஆளுநர் சதாசிவம் இடையே மோதல்: அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக காங். எதிர்ப்பு
திருவனந்தபுரம்: பல்கலைக்கழக துணை வேந்தர்கள் அடங்கிய கவுன்சில் அமைக்க கேரள ஆளுநர் பி.சதாசிவம் முடிவு செய்துள்ளதை அந்த மாநில ஆளும் கட்சியான காங்கிரஸ் கடுமையாக எதிர்த்துள்ளது. இதன்மூலம் ஆளுநர்-அரசு இடையே மோதல் போக்கு வெடித்துள்ளது.
கடந்த புதன்கிழமை கொச்சியில் கேரளாவின் அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களின் சந்திப்புக்கு ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். ஆளுநர் என்பவர்தான் அந்த மாநிலத்தின் பல்கலை.களுக்கு வேந்தர் எனப்படுவார். எனவே துணை வேந்தர்களை சந்திப்பது இயல்பானதே.
ஆனால் அந்த கூட்டத்தில், அனைத்து துணை வேந்தர்களையும் இணைத்து ஒரு கவுன்சில் தொடங்க முடிவு செய்யப்பட்டதாக தனது பேட்டியில் சதாசிவம் சொன்னதுதான் பிரச்சினைக்கு காரணமாகியுள்ளது. இந்த கவுன்சில் 3 மாதங்களுக்கு ஒருமுறை கூடி, உயர் கல்வியிலுள்ள பிரச்சினைகளை ஆய்வு செய்யும் என்று சதாசிவம் கூறினாலும், இது மாநில அரசின் செயல்பாட்டில் தலையிடுவதை போல உள்ளது என்று அந்த மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் எம்.எம்.ஹாசன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் உம்மன் சாண்டியிடம் நிருபர்கள் இதுகுறித்து கேட்டதற்கு நேரடியாக பதிலளிக்க மறுத்துவிட்டார். ஆனால், கேரளாவிலுள்ள பல்கலைக்கழகங்கள் நன்றாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும், சில பல்கலை.களில் ஏதாவது பிரச்சினை இருக்கலாம் என்றும் கூறினார்.
இந்த நிகழ்வுகள் ஆளுநர்-அரசு இடையேயான மோதலை வெளிச்சம்போட்டுள்ளன. தமிழகத்தை சேர்ந்த சதாசிவம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.