திரிபுராவில் திப்ரலாந்து தனி மாநில கோரிக்கையை தூண்டுவதே பாஜகதான்... மார்க்சிஸ்ட் கட்சி பாய்ச்சல்
திரிபுராவில் திப்ரலாந்து தனி மாநில கோரிக்கையை அரசியல் ஆதாயத்துக்காக பாஜக தூண்டுகிறது என சாடியுள்ளது சிபிஎம்.
அகர்தலா: திரிபுராவில் பூர்வகுடி மக்கள் வாழும் பகுதிகளை இணைத்து திப்ரலாந்து தனி மாநிலம் உருவாக்கக் கோரி நடைபெறும் போராட்டத்தை பாஜக தூண்டிவிடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாடியுள்ளது.
திரிபுராவின் பூர்வகுடி மக்கள், மேற்கு வங்கத்தில் இருந்து குடியேறியவர்களை தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். பூர்வகுடி மக்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து திப்ரலாந்து என்கிற தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.
கூர்க்காலாந்து
இதனால் பூர்வகுடி மக்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து தன்னாட்சி நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டது. தற்போது மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங் பகுதிகளை ஒருங்கிணைத்து கூர்க்காலாந்து தனி மாநிலம் கோரும் போராட்டம் வெடித்துள்ளது.
|
திப்ரலாந்து
இது திரிபுராவில் மீண்டும் கிளர்ச்சியை உருவாக்கி உள்ளது. தற்போது திரிபுராவில் பூர்வகுடி மக்கள் திப்ரலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தலைநகர் அகர்தலாவை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் நெடுஞ்சாலை மற்றும் ரயில் பாதையை போராட்டக் குழுவினர் கைப்பற்றியுள்ளனர்.
மணிப்பூர் சதி
இதனால் திரிபுராவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திரிபுரா மாநில செயலாளர் பிஜன் தார், மணிப்பூர் சட்டசபை தேர்தலுக்கு முன்னர் நாகா இனமக்கள் குழுக்களை தூண்டிவிட்டு இதேபோல் காலவரையற்ற போராட்டத்தை பாஜக தூண்டிவிட்டது. இதனால் மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த உடனேயே காலவரையற்ற போராட்டம் கைவிடப்பட்டது.
பாஜக கனவு
தற்போது திரிபுராவும் சட்டசபை தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது. இங்கும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக திடீரென திப்ரலாந்து போராட்டத்தை பாஜக தூண்டிவிடுகிறது. மணிப்பூரில் பாஜகவின் சதித் திட்டம் வென்றிருக்கலாம். ஆனால் திரிபுராவில் இது நடைபெறாது என்றார்.