ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லை; தேர்தலுக்கு காங். தயார்- சோனியா காந்தி
டெல்லி: ராகுல் காந்தி குறித்து காங்கிரஸ் காரியக் கமிட்டி ஒரு முடிவு எடுத்துள்ளது. அதன்படி அவர் காங்கிரசின் தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவராக மட்டுமே இருப்பார். பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட மாட்டார். இந்த முடிவு இறுதியானது. நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் ஆயத்தமாக உள்ளது. இந்தத் தேர்தல் முரண்பட்ட கொள்கைகளுக்கு இடையிலான போர். அந்தப் போரைச் சந்திக்க நாங்கள் தயார் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் தல்ஹோத்ரா ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு சோனியா காந்தி முக்கிய உரை நிகழ்த்தினார். அவர் பேசத் தொடங்கியபோது ராகுல், ராகுல் என்று கூட்டத்தினர் கோஷம் எழுப்பினர். அதைப் பார்த்த சோனியா காந்தி, முதலில் இந்த கோஷத்தை நிறுத்துங்கள் என்று கண்டிப்புடன் உத்தரவிட்டார். இதையடுத்து கோஷம் அடங்கியது.
அதன் பின்னர் சோனியா தனது உரையைத் தொடங்கினார். அவரது பேச்சு...
ராகுல் காந்தி குறித்து நேற்று நடந்த காரியக் கமிட்டிக் கூட்டத்தில், முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த முடிவு இறுதியானது. அதில் மாற்றம் இல்லை.
நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராகி விட்டது. இந்த போர்க்களத்தில் முரண்பட்ட கொள்கைகள் களத்தில் நிற்கின்றன. இந்த களத்தை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
நமது மதச்சார்பற்ற பாரம்பரியங்களைக் காக்க நடக்கப் போகும் போர் இது. இந்தப் போரை காங்கிரஸ் கட்சி எதிர்கொண்டு வெல்லும்.
மக்களை மதத்தின் பெயரால் பிளவுபடுத்துகிறது பாஜக
மதவாதம்தான் இன்று நாட்டின் மிகப் பெரிய சவாலாக உள்ளது. மதத்தை வன்முறைக்குப் பயன்படுத்துகிறது பாஜக. மக்களை பிளவுபடுத்த முயலுகிறது பாஜக. இதை முறியடிப்போம்.
நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஆரோக்கியமாக இருந்தாலும், வேறுபாடுகளும் அதிக அளவில் பெருகிக் கொண்டே போகிறது. இதைச் சரி செய்ய மன்மோகன் சிங் தலைமையிலான அரசு முயற்சிகளை எடுத்தவண்ணம் உள்ளது.
மதச்சார்பின்மையை தேர்தல் உத்தியாக பயன்படுத்தக் கூடாது
மக்களிடம் நாம் வாக்கு கேட்கப் போகும்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்போம். அப்படி கேட்பதில் நமக்குத் தயக்கம் இருக்கக் கூடாது. மதச்சார்பின்மையை நாம் தேர்தல் உத்தியாக பயன்படுத்தக் கூடாது.
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு நாம் சரியான முறையில் பதிலளித்து வந்துள்ளோம்.
ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்காக நான் ஐந்து அம்சத் திட்டத்தை கொடுத்துள்ளேன். தகவல் அறியும் உரிமைச் சட்டம், மக்கள் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் சக்தி வாய்ந்தவர்களாகப் போராட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆயுதமாக அமைந்துள்ளது.
வீட்டு வன்முறை, துஷ்பிரயோகம் ஆகியவற்றைத் தடுக்க வலிமையான சட்டங்களை இந்த அரசு கொண்டு வந்துள்ளது.
மத்திய அரசிடமிருந்து முன்பை விட அதிக அளவிலான உதவிகளை மாநில அரசுகளும், பஞ்சாயத்துக்களும் தற்போது பெற்று வருகின்றன. இதுபோன்ற உதவிகளை, மிகப் பெரிய அளவிலான உதவிகளை மாநில அரசுகளும், பஞ்சாயத்துக்களும் பெற்றதில்லை.
இந்த அளவுக்கு எந்த மத்திய அரசாவது இதற்கு முன்பு செய்துள்ளதா. பிரதமர் தனது இலக்குகளில் மிகவும் கவனமாக இருக்கிறார், தீவுிரமாக இருக்கிறார்.
மக்களை ஒருங்கிணைத்து, அனைவருக்கான அரசாகவும் செயல்படவே காங்கிரஸ் எப்போதும் உழைத்து வருகிறது. அதுதான் நமது நாட்டின் பாரம்பரியமும் கூட.
மக்களைப் பிரித்துப் பார்க்க காங்கிரஸ் ஒருபோதும் முயன்றதில்லை. அது நமக்கு தேவையும் இல்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் மக்களை பிளவுபடுத்தி, ஒற்றுமையை சீர்குலைக்க முயலுகின்றன. மக்கள் இவர்களைப் புரிந்து கொண்டு அமைதி காக்க வேண்டும்.
நமது நாட்டின் ஜனநாயகத்தின் அடித்தளத்தை இட்ட கட்சி காங்கிரஸ் கட்சி. ஏழ்மை, வறுமையை ஒழிக்க தீவிரமாக பாடுபட்ட கட்சி காங்கிரஸ். நாட்டிலிருந்து ஏழ்மை முழுமையாக போகும் வரை தனது முயற்சிகளை காங்கிரஸ் கைவிடாது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கரைந்து போய் விடும் கட்சியல்ல காங்கிரஸ். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் தீவிரமாக செயல்பட்ட, செயல்படும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே.
பிரசாரக் குழுத் தலைவர் ராகுல் காந்தி
முன்னதாக நேற்று நடந்த காரியக் கமிட்டிக் கூட்டத்தில் பலரும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினர். ஆனால் அதை சோனியா காந்தி நிராகரித்து விட்டார். அப்படி அறிவிப்பது காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியத்திலேயே கிடையாது. எனவே அப்படிச் செய்ய முடியாது என்று அவர் கூறி விட்டா்ர்.
இதையடுத்தே காங்கிரஸ் கட்சியின் பிரசாரக் குழுத் தலைவராக ராகுலை நியமிக்க தீர்மானிக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தனது பணிகளில் கவனம் திசை திரும்பாமல் சிறப்பாக செயல்படுகிறார் பிரதமர் மன்மோகன் சிங்.