ரூபாய் நோட்டு செல்லாது…மோடியின் வரலாற்று சிறப்பு மிக்க முடிவு.. புகழ்ந்து தள்ளிய முகேஷ் அம்பானி
ரூபாய் நோட்டு செல்லாது என்ற மோடியின் அறிவிப்பு வரலாற்று சிறப்பு மிக்க முடிவு என்று ரிலையன்ஸ் ஜியோ தலைவர் முகேஷ் அம்பானி புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.
மும்பை: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு வரலாற்று சிறப்பு மிக்க ஒன்றாகும் என்று தொழிலதிபர் முகேஷ் அம்பானி மோடியை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த 8ம் தேதி மோடி அறிவித்தார். மேலும், ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தாமல் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனையை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளில் வங்கிகளை ஈடுபடுத்துவதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன.

ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றன. மேலும், நாடாளுமன்றத்திலும் கேள்விகளை கேட்டு, இரு அவைகளையும் எதிர்க்கட்சி எம்பிக்கள் முடக்கி வருகின்றனர்.
இந்நிலையில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கையை வெகுவாக பாராட்டியுள்ளார். இன்று ஜியோ தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முகேஷ் அம்பானி, ரூபாய் நோட்டு செல்லாது என்ற மோடியின் அறிவிப்பு வரலாற்று சிறப்பு மிக்கது என்றும் இது ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தால் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு இந்தியாவை இட்டுச் செல்லும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்த பிரதமர் மோடியை பாராட்டுவதாக கூறியுள்ள முகேஷ் அம்பானி, கருப்புப் பணத்தை ஒழித்து, பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் இந்தத் திட்டத்தால் சாதாரண மக்கள் பெரிய அளவில் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications