ஜெ. மேல்முறையீட்டு மனு விசாரணையில் அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜராக கூடாது: திமுக மனு தாக்கல்
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு எதிராக அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜராக அனுமதிக்க கூடாது என்று கர்நாடக ஹைகோர்ட்டிலும், கர்நாடக அரசிடமும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு 4 வருட சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ஹைகோர்ட்டில் ஜெயலலிதா மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் அந்த மனு மீதான விசாரணையின்போது, அரசு தரப்பில், ஏற்கனவே சிறப்பு கோர்ட்டில் ஆஜரான, பவானிசிங் வாதிட உள்ளார். இதை எதிர்த்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பில் வழக்கறிஞர்கள், இன்று கர்நாடக ஹைகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். முன்னதாக, கர்நாடக அரசுக்கும் அன்பழகன் இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளார்.
இந்த மனு மற்றும் கடிதத்தின் சாரம்சம் வருமாறு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் பவானிசிங் அரசு வக்கீலாக பணிபுரிந்த காலத்தில், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டார். வழக்கை தாமதப்படுத்த குற்றவாளிகள் தரப்பு முயன்றபோது அதற்கு உறுதுணையாக இருந்தார் பவானிசிங்.
பவானிசிங்கின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்த கர்நாடக ஹைகோர்ட், அவரது ஒரு நாள் சம்பளமான ரூ.65 ஆயிரத்தை அபராதமாக செலுத்த உத்தரவிட்ட சம்பவமும் நடந்தது. 2013 மார்ச் மாதத்தில், கர்நாடக ஹைகோர்ட் ஒருமுறை கூறுகையில் "வழக்கை இழுத்தடிக்க இயன்ற அளவுக்கு அரசு வழக்கறிஞர் முயற்சி செய்கிறார். அதற்கான காரணத்தை அவரே நன்கு அறிவார்" என்று கூறியுள்ளது.
ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் தண்டனை கொடுத்த பிறகு கர்நாடக ஹைகோர்ட்டில் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அப்போது ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிக்க ஆட்சேபனை இல்லை என்று கூறியவர்தான் அரசு வக்கீல் பவானிசிங். இவரது இந்த நடவடிக்கை வியப்பாக உள்ளதாக கர்நாடக ஹைகோர்ட்டும் தெரிவித்தது. மேலும், பவானிசிங்கின் உடல்நிலையும் மிகவும் சிறப்பாக இருப்பதாக கூறிவிட முடியாது. எனவே பவானிசிங்கை, ஜெயலலிதா மீதான வழக்கில் அரசு வழக்கறிஞராக தொடரச் செய்ய கூடாது. இவ்வாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.