நாங்க இருக்கோம் அம்மா! சிறையில் ஜெ.வை விழுந்து, விழுந்து கவனிக்கும் அதிகாரிகள்: ஒரு லைவ் ரிப்போர்ட்!
பெங்களூர்: பெங்களூர் மத்திய சிறையில் ஜெயலலிதாவுக்கு ஏசி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 27ம்தேதி முதல் பெங்களூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது ஜாமீன் மனுவை கர்நாடக ஹைகோர்ட் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்ப்டது. ஆனால், உச்சநீதிமன்றமோ, விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைத்துவிட்டது.
18 நாட்களாக பெங்களூர் சிறையிலுள்ள ஜெயலலிதா சிறையில் எப்படி உள்ளார், அங்கு அவர் எப்படி நடத்தப்படுகிறார் என்பதை அறிய அனைவருக்கும் ஆவல் இருப்பது இயல்பானதே. அதன் தொகுப்பு இதோ..
தீபாவளிக்கும் சிறைதானா?
வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றாலும், சனிக்கிழமை முதல் ஒரு வார காலத்திற்கு உச்சநீதிமன்றத்துக்கு தீபாவளி விடுமுறையாகும். எனவே வாத-பிரதிவாதங்கள் ஒரே நாளில் முடியாவிட்டால், தீபாவளி விடுமுறை முடிந்த பிறகுதான் மீண்டும் விசாரணை நடைபெற வாய்ப்புள்ளது.
எவ்வளவு நாள்தான் ஏசி இல்லாமல் இருப்பார்?
நாட்கள் கடந்து செல்வதால் சிறைக்குள் ஜெயலலிதாவுக்கு ஏசி வசதி செய்து கொடுக்க சிறைத்துறை முடிவு செய்தது. அதன்படி நேற்று ஜெயலலிதா உள்ள அறையில் ஏசி பொருத்தப்பட்டுள்ளது. முன்னதாக ஃபேனுடன், ஏர்கூலரும் அளிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
சட்டத்தை வளைத்து வசதி
பெங்களூர் டேனரி ரோட்டிலுள்ள ஒரு நிறுவனத்திடமிருந்து ஏசி இயந்திரம் வாங்கி வரப்பட்டு, சிறையின் பொறியாளர் ஜெயராமன் தலைமையிலான குழுவால் ஏசி பொருத்தப்பட்டுள்ளது. பெங்களூரில் இரவில் அவ்வப்போது மழை பெய்தாலும், பகலில் வெயில் கொளுத்துகிறது. எனவே ஏசி அவசியம் என்று கருதி ஜெயலலிதாவுக்கு இந்த வசதி செய்து தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் எந்த ஒரு சிறைச்சாலையிலும், ஏசி வசதி கிடையாது. அதற்கு சட்டப்படி அனுமதியும் அளிக்கப்படவில்லை.
உத்தரவிடுங்கள் அம்மா..
ஏசி மட்டுமின்றி வேண்டிய வசதிகளை சிறை அதிகாரிகள் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் செய்து தந்துவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் உறுதி செய்கின்றன. ஜெயலலிதா தரப்பில் இருந்து வரும் வேண்டுகோள் அனைத்தையும் உடனுக்குடன் செய்து கொடுத்து சிறை அதிகாரிகள் நல்ல பிள்ளைகளாக நடந்து கொள்வதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக இந்த தகவலை வெளியே தெரிவிக்க கூடாது என்பதில் சிறை அதிகாரிகள் உறுதியாக உள்ளனர்.
என்னென்ன வசதிகள் தெரியுமா
சிறைக்கைதிகளுக்கு ஏதாவது ஒரு வேலை ஒதுக்கப்பட வேண்டும் என்பது விதிமுறை. ஜெயலலிதா உள்ளிட்டோர் ஊதுபத்தி உருட்டுவது, காய்கறி நறுக்குவது, டெய்லரிங் போன்ற வேலைகளில் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும். ஆனால் அதெல்லாம் வேண்டாம், நாங்கள் ஆவணத்தில் மட்டும் அப்படி வேலை ஒதுக்கப்பட்டதாக குறித்துக்கொள்கிறோம் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.
என்ன வேண்டும் சொல்லுங்கள்
சிறை கைதிகள் அணியும் வெள்ளைச் சேலை உடுத்த வேண்டாம், வண்ணச்சேலை அணியுங்கள் என்றும் ஜெயலலிதாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், வெளியில் இருந்து சாப்பாடு வாங்கிவரவும் அவருக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. லேப்டாப், செல்போன் போன்ற வசதிகளையும் செய்து கொடுத்திருப்பதாகவும் சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதாவுக்கு லெமன் ஜூஸ்
ஜெயலலிதா கடந்த சில நாட்களாக காலையில் பொங்கல், பிரெட் சாண்ட்விஜ், இட்லி, பால் போன்றவற்றையும், மதியம் அரிசி சாதத்தையும் உணவாக எடுத்து வருகிறாராம். எலுமிச்சை சாறு அதிகம் குடிப்பதாக கூறப்படுகிறது.
சசிகலாவுக்கு இளநீர்
சசிகலாவை பொறுத்தளவில் வயிற்று வலியால் அவ்வப்போது அவதிப்படுகிறாராம். இதற்காக நிறைய இளநீர் குடித்து வருகிறார் என்று சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கால் முட்டி வலி
ஜெயலலிதாவுக்கு கால் முட்டியில் சற்று வலி காணப்படுகிறது. இதனால் அவர் அதிக தூரம் வாக்கிங் செல்வதில்லை. இருப்பினும், இந்த ஒரு பிரச்சினையை தவிர்த்து பார்த்தால் சிறையிலுள்ள மற்ற மூவரையும்விட ஜெயலலிதாதான் மிகுந்த சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் உள்ளார் என்று சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பாவம் சுதாகரன்..
மற்ற கைதிகளில் இருந்து சுதாகரன் மிகுந்த மாறுபட்டு காணப்படுகிறார் என்று சிறையின் ஆண்கள் பிரிவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் சுதாகரன் மிகவும் உற்சாகமிழந்து விரக்தியுடன் உள்ளாராம். கடந்த சில நாட்களாக அவர் வாக்கிங் செல்வதும் கிடையாதாம்.
தயார் நிலையில் தமிழக காவல்துறை!
மத்திய சிறைக்கு வெளியே தமிழக ஐஜி ஒருவர் தலைமையில் போலீஸ் படை ஒன்று தொடர்ந்து ரோந்து சுற்றியபடி உள்ளது. கடந்த மாதம் 27ம்தேதி ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து இந்த போலீஸ் குழு, பெங்களூரிலேயே முகாமிட்டுள்ளதாம். ஜெயலலிதாவுக்கு தேவைப்படும் உதவிகளை செய்வது, அவரது பாதுகாப்பை கண்காணிப்பது போன்ற வேலைகளில் இந்த குழு ஈடுபட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.