சிங்கப்பெண்! கத்தியுடன் வந்த கொள்ளையன்.. தனியாளாக விரட்டிய பெண் வங்கி மேலாளர்.. மாஸ் சம்பவம்!
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் வங்கியை கொள்ளையடிக்க ஆயுதங்களுடன் வந்த கொள்ளையனை தனி ஒரு ஆளாக பெண் மேலாளர் ஒருவர் எதிர்த்து சண்டையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கையில் கத்தியை வைத்து மிரட்டிய கொள்ளையனை பெண் மேலாளர் பூனம் குப்தா வெறும் கையுடன் எதிர்கொண்ட காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளன.
தற்போது இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
காங். குழப்பம்.. ராஜஸ்தான் முதல்வராக தொடரும் கெலாட்? ரொம்பவே எதிர்பார்த்தாரே பைலட்! அப்போ அவருக்கு?
வங்கி
ராஜஸ்தான் மாநிலத்தின் ஸ்ரீகங்கனார் பகுதியில் மருதாரா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று வங்கி வழக்கம் போல செயல்பட்டுக்கொண்டிருந்தது. அப்போது முகமூடி அணிந்த கொள்ளையன் ஒருவன் திடீரென ஆவேசமாக வங்கிக்குள் வந்து கத்தியை காட்டி மிரட்ட தொடங்கியுள்ளான். அந்நேரம் வங்கியில் அதிக மக்கள் நடமாட்டம் இல்லாததால் இந்த சம்பவம் வெளியில் உள்ளவர்களுக்கு தெரியவில்லை. இவ்வாறு இருக்கையில், வங்கி மேலாளர் பூனம் குப்தா தனது இருக்கையிலிருந்து எழுந்து வந்து என்ன நடக்கிறது என்று பார்த்துள்ளார்.
கொள்ளை முயற்சி
வங்கியில் கொள்ளை முயற்சி நடக்கிறது என்பதை புரிந்துகொண்ட அவர் அந்த கொள்ளையனை தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் கொள்ளையன் தனது கையிலிருந்த பையை டேபிள் மீது வைத்துவிட்டு அதில் பணம் நிரப்புமாறு கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார். மேலாளர் பூனம் கையில் ஆயுதம் ஏதும் இல்லாமல் அவனை தடுக்க தொடர்ந்து முயன்றுள்ளார். அப்போது அவனுடைய பேன்ட் பாக்கெட்டிலிருந்து கட்டிங் பிளேடு கீழே விழுந்துள்ளது. உடனே பூனம் அதை எடுத்துக்கொண்டார்.
பெண் அதிகாரி
இவரை தொடர்ந்து இதர அலுவலர்கள் கொள்ளையனை எதிர்த்து ஒன்று கூடிவிட்டனர். அதில் ஒருவர் கொள்ளையனின் கையை பிடிக்க முயன்றபோது அவன் தனது கத்தியை கொண்டு அவர் மீது தாக்க முற்பட்டான். ஆனால் அவர் பத்திரமாக அதிலிருந்து தப்பிக்கொண்டார். பின்னர் பூனம் தான் கையில் வைத்திருந்த கட்டிங் பிளேடு கொண்டு கொள்ளையனின் கையை தாக்க தொடங்கினர். சுதாரித்துக்கொண்ட கொள்ளையன் பதிலுக்கு தன் கத்தியை கொண்டு பெண் அதிகாரியை தாக்க முயன்றான்.
சிசிடிவி காட்சிகள்
ஆனால் பூனம் தாக்குதலிலிருந்து நழுவிவிட்டார். பின்னர் அனைவரும் சேர்ந்து அவனை பிடிக்க நெருங்குகையில், ஒருவர் மட்டும் வெளி கேட்டை மூட சென்றுவிட்டார். இதனைக் கண்ட கொள்ளையன் கண்ணிமைக்கும் நொடிக்குள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டான். விஷயம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீரா சௌக் காவலர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர் தீவிரமாக விசாரணை நடத்தியதில் 29 வயதான லாவிஷ்தான் இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து லாவிஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. கொள்ளையனை ஆயுதம் ஏதும் இன்றி எதிர்த்து சண்டையிட்ட மேலாளர் பூனம் குப்தாவிற்கு பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.