பிளாஷ்பேக் 2014: நேஷனல் ஹெரால்டு, சாரதா சிட் பண்ட் உட்பட பரபரப்பு ஏற்படுத்திய 5 ஊழல் வழக்குகள்
டெல்லி: 2014ஆம் ஆண்டும் ஊழல் பல வழக்குகளால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மகன் ராகுல் மீதான நேஷனல் ஹெரால்டு நில மோசடி, சாரதா சிட் பண்ட் மோசடி உள்ளிட்ட 5 முக்கியமான ஊழல் வழக்குகளைப் பற்றி பார்க்கலாம்
நேஷனல் ஹெரால்டு ஊழல்
காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த மிக முக்கிய அரசியல் வழக்கு நேஷனல் ஹெரால்டு மோசடி.
ஜவஹர்லால் நேரு காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தொடங்கப்பட்டதுதான் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை. பின்னாளில் பலத்த நஷ்டத்தை சந்தித்தது. இந்த நஷ்டத்தை சரிகட்ட அப்பத்திரிகை நிர்வாகம் சுமார் 90 கோடி ரூபாய் வரை கடன்களை பெற்றிருந்தது.
இந்தக் கடன்களை தீர்க்க முடியாமல் அப்பத்திரிகை தவித்து வந்த நிலையில் சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் சேர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான பணத்திலிருந்து கட்சி விதிமுறைகளை மீறி 90 கோடி ரூபாயை அப்பத்திரிகைக்கு அளித்து கடனை அடைத்தனர்.
இதற்கு பிரதிபலனாக அப்பத்திரிகைக்கு சொந்தமாக இருந்த அசையும் மற்றும் அசையா சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான சொத்துகளை சோனியாவும் ராகுலும் அபகரித்துக் கொண்டனர் என்பதுதான் சுப்பிரமணியன் சுவாமியின் புகார்.
இது தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கின் விசாரண நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு சோனியா, ராகுலுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
சாரதா சிட் பண்ட் ஊழல்
நாட்டை உலுக்கிய பல்லாயிரம் கோடி சாரதா சிட் பண்ட் ஊழல் இந்த ஆண்டின் மிகப் பெரிய ஊழலாகும். மேற்கு வங்க மாநிலத்தில் அரசியல் சூறாவளியைக் கிளப்பியிருக்கும் ஊழல் இது.
14 மாநிலங்களில் 27 லட்சம் முதலீட்டாளர்கள், மேற்கு வங்கத்தின் சாரதா சிட் பண்ட் நிறுவனத்தில் ரூ2,500 கோடி முதலீடு செய்தனர். ஆனால் இத்தனை ஆயிரம் கோடி பணமும் பொதுமக்களுக்கு திருப்பித் தரப்படாமல் பல ஊழல் பெருச்சாளிகளால் விழுங்கப்பட்டிருக்கிறது.
இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.குணால் கோஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவர் கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டார். ஆனால் குணால் கோஷோ மேலும் பலருக்கும் இதில் தொடர்பு உள்ளது. கைது செய்யாவிட்டால் தற்கொலை செய்வேன் என்று கூறியபடியே தற்கொலைக்கும் முயன்று பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து மற்றொரு திரிணாமுல் எம்.பி சிரின்ஜோய் கைது செய்யப்பட்டார். இவர் மேற்கு வங்க முதல்வர் மமதாவுக்கு மிகவும் நெருக்கமானவரும் கூட தொடர்ந்தும் சிபிஐ விசாரணையில் மேற்கு வங்க மூத்த அமைச்சர் மதன் மித்ராவும் சிக்கி சிறைக்குப் போனார். இதனால் மமதா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் பெயர் அடிபட்டதும் குறிப்பிடத்தக்கது.
மத்திய பிரதேச தேர்வு முறைகேடு
பாரதிய ஜனதா ஆளும் மத்திய பிரதேசத்தில் மாநில தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தொழில் கல்விக்கான மருத்துவ தகுதி தேர்வில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மாணவர்கள் பலர் முறையான கல்வித் தகுதி இல்லாமலும் ஆள் மாறாட்டம் செய்தும் தேர்ச்சி பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது. இதில் பல முன்னாள் அமைச்சர்கள், மூத்த அரசியல்வாதிகள் சிக்கினர். மேலும் நூற்றுக்கணக்கான மாணவர்களும் கைது செய்யப்பட நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஒடிஷா சிட் பண்ட் மோசடி
மேற்கு வங்கத்தைப் போலவே ஒடிஷாவையும் உலுக்கியது ஏடி குழுமத்தின் சிட் பண்ட் மோசடி. இந்த மோசடி வழக்கில் ஒடிஷா அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், மும்பை பாலிவுட் நட்சத்திரங்கள் எனப் பலரும் சிக்கி சிறைக்குப் போயுள்ளனர். இந்த மோசடியில் ஒடிஷாவின் ஆளும் பிஜு ஜனதா தள அமைச்சர்களுக்கும் முக்கிய பங்கு இருப்பதாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனால் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஹிமாச்சல் கிரிக்கெட் சங்க நில மோசடி
ஹிமாச்சல பிரதேச மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு நிலம் ஒதுக்கீடு நடந்ததில் மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதில் பாஜகவின் பிரேம் குமார் துமல் மகன் அனுராக் தாக்குர் மீது புகார் கூறப்பட்டது.
பாஜக ஆட்சிக் காலத்தில் பிரேம்குமார் துமல் மகன் அனுராக் தாக்குர் தலைமையிலான ஹிமாசலப் பிரதேச மாநில கிரிக்கெட் வாரிய சங்கமானது, கிராம மக்களுக்கு சொந்தமான நிலத்தை கிரிக்கெட் வாரிய சங்கத்துக்கு கட்டடம் கட்ட வழங்கியதில் பெரும் மோசடி நடந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.