பெங்களூரை மூடிய பனி மூட்டம்- 100 விமானங்கள் தாமதம்.. சென்னைக்கு பல திருப்பி விடப்பட்டன
பெங்களூரு: கடும் பனிமூட்டம், மோசமான வானிலையால் பெங்களூரு விமான நிலையத்திற்கு நூற்றுக்கான விமானங்கள் தாமதமாக வந்து சேர்ந்தன. விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. ஏராளமான விமானங்கள் சென்னை விமான நிலையத்திற்கு மாற்றி விடப்பட்டு தரையிறக்கப்பட்டன.
பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாவே விமான போக்குவரத்தில் தடங்கல்கள் நிலவி வருகின்றன. நவம்பர் முதல் பிப்ரவரி வரை பெங்களூருவில் அதிகாலை 3 மணி முதல் 9 மணிவரை பனிமூட்டம் சூழ்ந்து காணப்படும்.
பெங்களூரில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த காரணத்தால், நவம்பர் மாத பனிப்பொழிவு தாமதமாகி, மழை பொழிந்து கொண்டிருந்தது. நூற்றாண்டிலேயே அதிகபட்ச நவம்பர் மாத மழை இங்கு பதிவானது.
இந்நிலையில், தற்போது வானம், நீல வண்ணத்தில் மேகமூட்டமின்றி தெளிவாக உள்ளது. இதனால், பனிப்பொழிவு அதிகரித்துவிட்டது.
பெங்களூருவில் கடந்த சில தினங்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் பெங்களூரு விமான நிலையத்தில், பெரிய ரக விமானங்களை தரையிறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் நிலவிய மோசமான வானிலையால் பெங்களூர் செல்லக்கூடிய 3 விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டு தரை இறங்கின.
இன்றும் அதிகாலை முதல் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. 100 விமானங்கள் புறப்படுவதிலும், தரை இறங்கவும் முடியாத நிலை ஏற்பட்டது. பெங்களூருவில் தரையிறங்க வேண்டிய பல விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன.
துபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் விமானம், லுப்தான்சா விமானம், பிரிட்டீஸ் ஏர்வேஸ் உள்ளிட்ட 36 விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதேபோல 60க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. இதனால் பல ஆயிரக்கணக்கான பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.