சென்னை இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் 4 அல்-உம்மா தீவிரவாதிகள் பெங்களூரில் கைது
பெங்களூர்: சென்னையில் இந்து முன்னணி தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் நான்குபேர் பெங்களூரில் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு மற்றும் பெங்களூர் போலீசார் இணைந்து நடத்திய வேட்டையில் இவர்கள் சிக்கினர்.
சென்னை அம்பத்தூர் இன்டஸ்டிரியல் எஸ்டேட்டில், திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார், கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி இரவு படுகொலை செய்யப்பட்டார். மர்ம கும்பல் அவரை வெட்டிக்கொன்று விட்டு தப்பி ஓடி விட்டனர். இந்த படுகொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய, 10 தனிப்படைகள் களத்தில் இறக்கப்பட்டன. போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் கருணாசாகர், இணை கமிஷனர் சண்முகவேலு, துணை கமிஷனர் மயில்வாகனன் ஆகியோரின் நேரடி தலைமையின் கீழ் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் துப்பு துலக்கப்பட்டு, ஏற்கனவே குத்புதீன், காஜாமொய்தீன், நசீர் மற்றும் 17 வயது மாணவர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில், நேற்று மேலும் நான்குபேர் பெங்களூர் விவேக்நகரில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பெயர்கள் அப்துல் சமீம், சமியுல்லா, சாதிக், நவாஸ் என்று தெரியவந்தது. இதில் சமீம் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அங்கு இந்து முன்னணி பிரமுகர் வெட்டப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவர்.
தற்போது கைதாகி இருக்கும் சமீம், மற்றும் நவாஸ் ஆகியோர்தான், சுரேஷ்குமாரை நேரடியாக அரிவாளால் வெட்டி கொன்றவர்கள் என்று தெரிய வந்துள்ளதாகவும், பொதுக்கூட்டம் ஒன்றில் முஸ்லீம்களுக்கு எதிராக சுரேஷ்குமார் பேசியதால், அவரை திட்டமிட்டு வெட்டி கொலை செய்து வீசியதாகவும், கொலையாளிகள் தெரிவித்துள்ளதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமியுல்லா பெங்களூர் விவேக்நகரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியாகும். கொலையாளிகளுக்கு இவர்தான் அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தமிழக காவல்துறையும், பெங்களூர் குற்றப்பிரிவு காவல்துறையும் இணைந்து இவர்களை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து பெங்களூர் குற்றப்பிரிவு காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "அல்-உம்மா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த சமியுல்லா என்பவர் பெங்களூரில் பதுங்கியிருப்பதாக தமிழக போலீசார் அளித்த தகவலின்பேரில் அம்மாநில போலீசாருடன் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு சமியுல்லாவை சுற்றி வளைத்தோம். அப்போது அல்-உம்மா தீவிரவாதிகள் மேலும் மூவரான அப்துல் சமீம், சாதிக், நவாஸ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த 2-3 மாதங்களாக பெங்களூரில் பதுங்கியிருந்தனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளை தமிழகம் அழைத்துச்செல்கின்றனர் போலீசார்.