உச்சா போங்க.. டாய்லெட்டில்.. ஒரு ரூபாய் வாங்கிங்க... ஊக்குவிக்கும் அகமதாபாத் மாநகராட்சி!
அகமதாபாத்: பொது கழிப்பறைகளில் சிறுநீர் கழிப்போருக்கு ஒரு ரூபாய் அளிக்கும் திட்டத்தை அகமதாபாத் மாநகராட்சி அறிமுகப்படுத்த உள்ளது.
பொது கழிப்பறைகளில் சிறுநீர் கழிப்போருக்கு ஒரு ரூபாய் அளிக்கும் திட்டம் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள தாரேசவுக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த திட்டம் வெற்றி அடைந்தது. இதையடுத்து அந்த திட்டத்தை அகமதாபாத்தில் அறிமுகப்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
அகமதாபாத் மாநகராட்சி இந்த திட்டத்தை முதல்கட்டமாக நகரில் உள்ள 67 இடங்களில் அறிமுகப்படுத்த உள்ளது. அதுவும் பொது கழிப்பிடம் அருகில் உள்ள இடங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் வெற்றி பெற்றால் நகரில் உள்ள மீதமுள்ள பொது கழிப்பிடங்களிலும் அறிமுகப்படுத்தப்படும்.
கண்ட இடங்களில் சிறுநீர் கழிப்பதை தவிர்க்கவும், மக்களிடையே பொது கழிப்பறைகளை பயன்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்தவும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அரசு அதிகாரி பிரவீண் பட்டேல் கூறுகையில்,
நகரில் காசு கொடுத்து சிறுநீர் கழிக்கும் 67 பொது கழிப்பிடங்களுக்கு அருகே மக்கள் பொது இடங்களில் சிறுநீர் கழிக்கிறார்கள். இந்நிலையில் பொது கழிப்பறைகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தை கொண்டு வருகிறோம். நகரில் உள்ள சுமார் 300 கழிப்பறைகளில் 67ல் இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.