தொழிலதிபர்களுக்காகவே மோடி ஆட்சி நடக்கிறது என கேஜ்ரிவால் சொல்வது உண்மையே: கருத்து கணிப்பு
அகமதாபாத்: குஜராத்தில் மோடி தலைமையிலான ஆட்சி அதானி மற்றும் அம்பானி போன்ற தொழிலதிபர்கள் பயனடையத்தான் நடைபெறுகிறது என்று ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் சொல்வது சரிதான் என்று அம்மாநில மக்கள் கூறுவதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் தொடர்பாக சி.என்.என்.- ஐபிஎன் கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதில் பல மாநிலங்களைப் போல குஜராத்திலும் கள ஆய்வு மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதில் 'அதானி, அம்பானி போன்ற தொழிலதிபர்கள் பயனடையத்தான் குஜராத்தில் ஆட்சி நடைபெறுகிறது என்று கேஜ்ரிவால் சொல்வது' பற்றியும் கேட்கப்பட்டிருக்கிறது.
கேஜ்ரிவால் சொல்வதை ஒப்புக் கொள்கிறோம் என்று 46% குஜராத் மக்கள் கூறியுள்ளனர். ஆனால் இதை ஏற்க முடியாது என்று 25% பேர் மட்டும்தான் தெரிவித்துள்ளனர். 29% பேர் எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது என்று கூறியுள்ளனர்.
வளர்ச்சி உண்மைதான்
அதே நேரத்தில் குஜராத் மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது என 40% பேர் கூறியிருக்கின்றராம். ஆனால் அத்தகைய வளர்ச்சி அரசு கூறிக் கொள்வதைப் போல இல்லை என 15% பேரும் பெரும்பான்மையோருக்கு அந்த வளர்ச்சி திட்டங்கள் செல்லவில்லை என 23% பேரும் கூறியுள்ளனர்.
நல்ல அரசு, மிகப் பெரிய வளர்ச்சி என்பது எல்லாமே பொய் என்று 12% பேர் கூறியுள்ளனர்.
விலைவாசிதான் முதன்மை பிரச்சனை
இம்மாநிலத்தில் விலைவாசி உயர்வு தான் முதன்மை பிரச்சனை என 38% பேர் கூறியுள்ளனர். ஊழல்தான் முதன்மை பிரச்சனை என 12%, வேலைவாய்ப்பின்மைதான் பிரச்சனை என 12% கூறியுள்ளனர்.