மிஸ்டர் அமித்ஷா! எங்க போராட்டத்தில் தலையிடாதீங்க... ஒதுங்கிப் போங்க... எச்சரிக்கும் ஹர்திக் படேல்
அகமதாபாத்: இடஒதுக்கீட்டுக்கான எங்களது போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா ஈடுபட வேண்டாம் என்று படேல் சமூகத் தலைவர் ஹர்திக் படேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"எங்களுக்கும் இடஒதுக்கீடு கொடு; இல்லையேல் இடஒதுக்கீட்டை ஒழி" என்ற முழகத்தை முன்வைத்து ஹர்திக் படேல் தலைமையில் படேல் சமூகத்தினர் போராடி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி அமித்ஷாவின் சொந்த நகரமான அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஹர்திக் படேல் பேசியதாவது:

நமது இடஒதுக்கீடு கோரும் போராட்டத்தை எப்படியாவது முடிவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா மேற்கொண்டுவருவதாக செய்திகள் வந்துள்ளன. எங்களுடைய கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை எங்களது போராட்டம் தொடரும்.
எங்களது போராட்டத்தை ஒடுக்குவதற்கு நீங்கள் எப்படியான யுக்திகளையெல்லாம் பயன்படுத்துவீர்கள் என்பது நன்றாகவே தெரியும். அமித்ஷா அவர்களே! நீங்கள் எங்கள் போராட்டத்தில் தலையிடாமல் ஒதுங்கி இருங்கள் என்று இந்த மேடையிலேயே பகிரங்கமாக கூறுகிறேன்.
நீங்கள் என்னை படுகொலை செய்தால் ஆயிரமாயிரம் ஹர்திக் படேல்கள் உருவாவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எங்கள் கோரிக்கையை ஏற்று எங்களுக்கு நீதி வழங்குங்கள்.
குஜராத்தில் பேரணிகளும் பொதுக்கூட்டங்களும் நடத்துவதற்கு ஆளும் பா.ஜ.க. அரசு தடை விதித்து வருகிறது. படேல் சமூகத்தினர் அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக செல்வாக்கானவர்களாக இருந்தாலும் சமூக ரீதியாக அவர்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இல்லை எனில் அனைத்து இடஒதுக்கீட்டு முறையையும் ஒழித்துக்கட்டுங்கள்.
இவ்வாறு ஹர்திக் படேல் கூறினார்.












Click it and Unblock the Notifications