இமாச்சல பிரதேச தேர்தலின் முடிவை மாற்றுமா குரங்குகள்?

Subscribe to Oneindia Tamil
குரங்குகள் தேர்தலின் முடிவை மாற்றுமா?
BBC
குரங்குகள் தேர்தலின் முடிவை மாற்றுமா?

தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவு குரங்கு சக்திவாய்ந்ததா? ஆம் என்றால் ஆச்சரியம் ஏற்படுகிறதா? ஹிமாச்சல் பிரதேசத்தில் நிதர்சனமான உண்மை இதுதான்.

இந்தியாவின் வட மாநிலமான ஹிமாச்சல் பிரதேசத்தில் நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் அதிகரித்துவரும் குரங்குகளின் எண்ணிக்கை மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்திருக்கிறது. தற்போதைய தேர்தலில் முக்கிய பிரச்சனையாக முன்வைக்கப்படுவது குரங்குகளில் தொல்லை என்றால் நிலைமையை நீங்களே மதிப்பிடலாம்!

மாநிலத்தில் ஆளும் கட்சியான காங்கிரசும், எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் குரங்குகளின் பிரச்சனையை தீர்ப்பதாக வாக்குறுதிகளை அளித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

மாநில தலைநகர் ஷிம்லாவில் குரங்குக் கூட்டங்கள் எல்லா இடத்திலும் சுற்றிக் கொண்டிருக்கின்றன. வானரப் படைகள் தங்கள் குறும்புத்தனமான நடவடிக்கைகளால் அனைவரையும் அச்சுறுத்துகின்றன.

பத்து வயது நீலம் ஷர்மாவுக்கும் அவரது தம்பி ரோஹித்தும் பள்ளிக்கு செல்வதே பெரும்பாடாகிவிட்டது.

நீலம் கூறுகிறார், "செல்லும் வழியில் குரங்குக் கூட்டம் இருக்கும். எங்களை துரத்தி விளையாடும் அவற்றிடம் இருந்து தப்பிப்பதே பெரும்பாடாகிவிடும். சில நேரங்களில் புத்தகப்பையையும் பறித்துக் கொள்ளும் அவற்றின் சேட்டைகளுக்கு எல்லையே இல்லை. பெரியவர்களின் துணையில்லாமல் பள்ளிக்கு செல்லவே முடியாது" என்கிறார்.

இஞ்சியையும் தின்னும் குரங்குகள்

ஷிம்லாவில் கடைகள், சந்தைகள், சாலைகளில் என எங்குபார்த்தாலும் மனிதர்களின் அளவுக்கு குரங்குகளின் நடமாட்டமும் இருக்கிறது. அனைவரும் அச்சத்திலேயே இருக்கிறார்கள்.

சந்த்ராம் ஷர்மா சொல்கிறார், "குரங்குகளின் அட்டகாசத்திற்கு அளவேயில்லை. என் மருமகளை ஓடஓட விரட்டியதில் அவள் கீழே விழுந்துவிட்டாள். அப்போதும் விடாமல் அவளை கடித்து காயப்படுத்திவிட்டன. என்னுடைய பேரனையும் விரட்டி விரட்டி கடித்துவிட்டன".

ஷிம்லாவில் கடைகள், சந்தைகள், சாலைகளில் என எங்குபார்த்தாலும் மனிதர்களின் அளவுக்கு குரங்குகளின் நடமாட்டமும் இருக்கிறது.
BBC
ஷிம்லாவில் கடைகள், சந்தைகள், சாலைகளில் என எங்குபார்த்தாலும் மனிதர்களின் அளவுக்கு குரங்குகளின் நடமாட்டமும் இருக்கிறது.

குரங்குகள் பல்கிப்பெருகி, ஹிமாச்சல் பிரதேசத்தின் ஆயிரக்கணக்கான கிராமங்களில் தனது சாம்ராஜ்ஜியத்தை விரித்துக் கொண்டே செல்கின்றன. விவசாயத்தையும், பயிரையும் நாசப்படுத்தி மிகுந்த சேதத்தை விளைவிக்கின்றன. நமோல் கிராமத்தில் வசிக்கும் ப்யாரே லால் என்ற விவசாயி குரங்குகளின் படையெடுப்பைக் கண்டு அஞ்சுகிறார்.

அவர் சொல்கிறார், "மா, கொய்யா, மாதுளம், பாதாம் என பல்வேறு பழங்களையும் கடித்து குதறிவிடுகின்றன. இப்போது வயலில் எந்தவொரு பொருளையும் அவை விட்டுவைப்பதில்லை".

பரத் ஷர்மா என்ற மற்றொரு விவசாயி கூறுகிறார், "குரங்குகளுக்கு இஞ்சி பிடிக்காது என்று சொல்வார்கள். தெரியாமல் இஞ்சியை சாப்பிட்டுவிட்டால் அதன் முகம் அஷ்டகோணலாக மாறும் என்பதை வைத்துத்தான் 'இஞ்சி தின்ற குரங்கு போல் முகம்' என்று மனிதர்களை கிண்டல் செய்வார்கள். ஆனால், இப்போதெல்லாம் தங்களுக்கு பிடிக்காத இஞ்சியையும் கொஞ்சம் கூட விட்டுவைக்காமல் சாப்பிட்டு ஏப்பம் விடுகின்றன குரங்குகள்".

குரங்குகளின் பிரச்னை மனிதர்களை மட்டுமல்ல, மாநில அரசியலையும் பதம் பார்த்து, ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் காரணியாக மாறிவிட்டது.

பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் தேர்தல் வேட்பாளருமான டாக்டர் பிரமோத் ஷர்மா, "குரங்குகளால் ஏற்படும் பேரழிவை தடுப்பதற்காக விவசாயிகள் வேலி அமைக்கிறார்கள். வலை விரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இல்லாவிட்டால் பிற மாநில விவசாயிகளைப் போலவே ஹிமாச்சல் பிரதேச மாநில விவசாயிகளும் மிகப்பெரிய நட்டத்தை எதிர்கொண்டு இறுதியில் தற்கொலை செய்துக் கொள்ள வேண்டியதுதான்" என்கிறார்.

குரங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தாலும் அது விழலுக்கு இறைத்த நீராக வீணாகப்போனது.

வாடகைக் கம்புகள்

பி.பி.சி நிருபரிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நரேஷ் சௌஹான், "குரங்குகளின் பிரச்சனை தீவிரமான சிக்கல்" என்று கூறினார்.

"சில கிராமங்களில் குரங்குகளை வேட்டையாடி கொல்வதற்காக மத்திய அரசிடம் பேசி அனுமதி வாங்கினோம். ஆனால் குரங்குகள் மீதான மதரீதியான நம்பிக்கையால் மக்கள் அதற்கு ஒப்புகொள்வதில்லை" என்று கூறுகிறார்.

விலங்குகளை கொல்லக்கூடாது என்ற அரசு விதிகளால் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குரங்குகளின் பயத்தால் பல சுற்றுலா இடங்களில் குரங்கை விரட்டுவதற்கான கம்புகள் வாடகைக்கு கொடுக்கப்படுகின்றன என்பது பிரச்சனையின் தீவிரத்தை புரியவைக்கிறது.

அரசுத் தரவுகளின்படி, ஆண்டுதோறும் 150 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பயிர்களையும் உணவுப்பொருட்களையும் குரங்குகள் நாசம் செய்கின்றன.
BBC
அரசுத் தரவுகளின்படி, ஆண்டுதோறும் 150 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பயிர்களையும் உணவுப்பொருட்களையும் குரங்குகள் நாசம் செய்கின்றன.

அரசுத் தரவுகளின்படி, ஆண்டுதோறும் 150 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பயிர்களையும் உணவுப்பொருட்களையும் குரங்குகள் நாசம் செய்கின்றன.

ஹிமாச்சல் பிரதேச மாநில தேர்தலில் காங்கிரசும், பாஜகவும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக குரங்குகளின் பிரச்சனையை தீர்ப்பதாக வாக்குறுதி அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

ஆனால் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு என்ன? பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கு பிடித்த கதையை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் குரங்குகளை பிடித்து அரசை பிடிக்கும் கதையை முதன்முதலாக கேட்கிறோம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+