முஸ்லீம் இளைஞர்களைக் கைது செய்வதில் நெறிமுறைகள்.. பரிந்துரையை நிராகரித்த உள்துறை

இருப்பினும் இந்தப் பரிந்துரைகளை உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளதாம். ஏற்கனவே பல்வேறு சட்டப் பாதுகாப்புகள், நீதிமன்றம் உள்ளிட்டவை இருப்பதால் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் அவசியமில்லை உள்துறை அமைச்சகம் கூறியுள்ளதாம்.
பல்வேறு பொய் வழக்குகளில் முஸ்லீம் இளைஞர்கள் பல்வேறு மாநிலங்களிலும் கைது செய்யப்படுவதால் அதைத் தடுக்க இந்த வழிகாட்டு நெறிமுறைகளை உள்துறை அமைச்சகத்திற்கு சிறுபான்மையினர் ஆணையம் பரிந்துரைத்திருந்தது.
இருப்பினும் ஏற்கனவே அரசியல் சட்ட ரீதியாக போதுமான பாதுகாப்பு அனைத்துக் குடிமக்களுக்கும் உள்ளது. தீவிரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டாலும் கூட அதற்குத் தேவையான சட்ட உதவிகளையும், நிவாரணத்தையும் பெற நிறையவே வழிகள் உள்ளன. எனவே புதிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு இப்போது அவசியமில்லை என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளதாம்.
மேலும் விசாரணை அமைப்புகள், விசாரணை அதிகாரிகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் நீதிமன்றங்கள் நிச்சயம் கண்காணித்து வருகின்றன. ஜாமீன் மனுக்கள், தண்டனை விதிப்பு உள்பட அனைத்துமே சட்டப்படியாகவே நடந்து வருகின்றன. எங்குமே சட்ட மீறல் இடம் பெற வாய்ப்புகள் இல்லை என்றும் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளதாம்.
தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் பரிந்துரைகள் அனைத்து அமைச்சகத்திற்கும் அனுப்பி கருத்துருக்களும் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் தற்போது இந்தப் பரிந்துரைகளை உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளதாம்.
சிறுபான்மையினர் ஆணையம் சொல்வது என்ன...?
நாடு முழுவதும் முஸ்லீம் சமுதாயத்தினர் மத்தியில் ஒரு விதமான பாதுகாப்பற்ற உணர்வு காணப்படுகிறது. இதற்குக் காரணம், முஸ்லீம் இளைஞர்கள் பலர் நாட்டின் பல பகுதிகளில் பொய்யான வழக்குகளில் கைது செய்யப்படுகின்றனர். விசாரணை என்ற பெயரில் சித்திரவதைக்குள்ளாகின்றனர். எதற்கெடுத்தாலும் தீவிரவாத குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. இதனால் அப்பாவி முஸ்லீம் இளைஞர்களும் அவர்களது குடும்பத்தினரும் பெரும் துயரத்துக்குள்ளாகின்றனர்.
பெரும்பாலான வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் கடைசியில் அப்பாவிகளாக உள்ளனர். அவர்களுக்கும் அவர்கள் மீது போடப்படும் வழக்குகளுக்கும் எந்த தொடர்பும் இருப்பதில்லை. அப்படிப்பட்ட நிலையில், விடுதலை செய்யப்படும்போது அவர்களுக்குரிய நிவாரணங்கள் அவர்களுக்குத் தரப்படுவதில்லை. இதை நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும். மதக் கலவரத்தால் பாதிக்கப்படும் அனைவருக்கும் ஒரே மாதிரியான இழப்பீடுகள் தரப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு பரிந்துரைகள் இடம் பெற்றிருந்தன.
முன்னதாக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ரஹ்மான் கானும், அப்பாவி முஸ்லீம்களை போலீஸார் பொய்யான வழக்குகளில் கைது செய்வது அதிகரித்து வருவதாக குறை கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
தேசிய சிறுபான்மையினர் ஆணையம் மொத்தம் 11 பரிந்துரைகளை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியிருந்தது.












Click it and Unblock the Notifications