நாடுமுழுவதும் அனல் காற்று... கோடையை சமாளிக்க பேரிடர் மேலாண்மை ஆலோசனை
கோடை காலத்தில் அனல் காற்று அதிகமாக வீசும் மாநிலங்களில் மேற்கொள்ள வேண்டியவை குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
டெல்லி: அக்னி வெயில் தொடங்கும் முன்பே அனல் காற்று வீசி வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் 105 டிகிரிக்கும் மேலாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. வட இந்தியாவில் குறிப்பாக மத்திய பிரதேசத்தில் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குஜராத், ராஜஸ்தானில் அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் தேசிய பேரிடர் மேலாண்மை சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் வெயிலின் கோரத்தாண்டவம் தொடங்கி விட்டது. சாலைகளில் முட்டையை உடைத்து ஆம்லேட் போடும் அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா, ஓடிசா, மகராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் மக்களை பாதுகாக்க தேசிய பேரிடர் மேலாண்மை களத்தில் இறங்கியுள்ளது.
அனல் காற்று
அக்னி வெயிலையும் அனல் காற்றையும் சமாளிக்க சில ஆலோசனைகளை மாநில அரசுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. நடப்பாண்டு ஒரு டிகிரி செல்சியல் வெப்பம் அதிகமாக காணப்படும் என்றும் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மேற்கு மத்திய பிரதேசம், மேற்கு ராஜஸ்தான் மாநிலங்களில் அனல் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கோடை விடுமுறை
இந்த கோடை காலத்தில் ஊரக வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்களுக்கு பணிகளை அளிக்க வேண்டாம் எனவும், அவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கவும் தேசிய பேரிடர் மேலாண்மை அறிவுறுத்தியுள்ளது.
கதவு ஜன்னல்களை மூடுங்கள்
அனல் காற்றின் அதிகரிக்கும் என்பதால் கதவு ஜன்னல்களை மூடி அறைக்குள்ளேயே அமர்ந்திருங்கள். வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள நேரமான காலை 11 மணி முதல் 3 மணிவரை வெளியில் நடமாட வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கூலாக இருங்கள்
அறைகளை குளிர்ச்சியாக வைத்திருங்கள், கதவு, ஜன்னல்களுக்கு குளிர்ச்சி தரக்கூடிய திரைச்சீலைகளை போடுங்கள் இதன் மூலம் குளிர்ந்த காற்று அறைக்குள் சுற்றி வரும். ஒருநாளைக்கு இருமுறை குளிர்ந்த நீரில் குளியுங்கள்.
இயற்கை பழ ஜூஸ்கள்
கோடையில் காரணமான உணவுகள் உட்கொள்ள வேண்டாம். இயற்கை பழ ரசங்கள் அருந்துங்கள். செயற்கை குளிர்பானங்கள் அருந்த வேண்டாம். மதுபானங்கள் அருந்த வேண்டாம்.