காஷ்மீருக்கான அரசியல் சாசனத்தின் 370, 35ஏ பிரிவுகள்.. அப்படி என்ன இருக்கிறது இதில்?
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 மற்றும் 35ஏ பிரிவுகளை நீக்குவதாக மத்திய அரசு இன்று அதிரடியாக அறிவித்து விட்டது. இந்த அறிவிப்புக்காகவே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆயிரக்கணக்கில் படையினரை மத்திய அரசு அங்கு குவித்தது தற்போது வெளிச்சமாகியுள்ளது.
நாடு விடுதலை அடைந்த தனி நாடாக இருந்தது ஜம்மு காஷ்மீர். முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருக்கும் ஜம்மு காஷ்மீரை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சித்தது.
ஆனால் ஜம்மு காஷ்மீர் மகாராஜா ஹரிசிங் இந்தியாவுடன் இணைய ஒப்புக் கொண்டார். இதையடுத்து இந்தியா- பாகிஸ்தான் யுத்தம் நடைபெற்றது. அப்போது காஷ்மீரின் சில பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டது. அதுதான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீராக அழைக்கப்படுகிறது.
அரசியல் சாசன 370வது பிரிவு
இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைந்த போது பிற மாநிலங்களைப் போல அல்லாமல் சில சிறப்பு உரிமைகள் அம்மாநிலத்துக்கு வழங்கப்பட்டன. இந்த சிறப்பு உரிமைகள் வழங்கும் அரசியல் சாசனப்பிரிவுதான் 370.
தனி கொடி, பிரதமர்
தொடக்கத்தின் இந்த 370-வது பிரிவு என்பது அதிகபட்ச மாநில சுயாட்சியை கொண்டதாக இருந்தது; ஜம்மு காஷ்மீருக்கு தனி கொடி, தனி அரசியல் சாசனம், தனி பிரதமர் என கூடுதல் சுயாட்சி அதிகாரங்களுடன் இருந்தது. ஏனெனில் ஜம்மு காஷ்மீர் மக்கள் சுதந்திர நாடாக இருக்க விரும்புகிறார்களா? இல்லையா? என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உத்தரவிட்டிருந்தது. இதை இந்தியாவும் ஏற்றிருந்தது.
சிறப்பு உரிமைகள் குறைப்பு
இதனால் ஜம்மு காஷ்மீரத்துக்கான சிறப்பு உரிமைகள் அனுமதிக்கப்பட்டன. காலப்போக்கில் 370-வது பிரிவின் பல பிரிவுகள் அடுத்தடுத்து நீக்கப்பட்டன. பெயரளவுக்கு சிறப்பு உரிமை வழங்கக் கூடிய ஒருபிரிவாகத்தான் 370 இருந்து வருகிறது. இந்த பிரிவையும் நீக்கக் கோரி வழக்குகளும் தொடரப்பட்டன.
தேசிய இன உரிமை
அதேபோல் அரசியல் சாசனத்தின் 35ஏவும் ஜம்மு காஷ்மீரில் பிற தேசிய இனத்தவர் குடியுரிமை பெற முடியாது என்பதை திட்டவட்டமாக சொல்கிறது. இதனால் ஜம்மு காஷ்மீரில் குடியேறினாலும் அங்கு நிலம் எதனையும் பிற தேசிய இன மக்கள் வாங்கிவிட முடியாது. இதனால் காலம் காலமாக இஸ்லாமிய பெரும்பான்மையினராக காஷ்மீர் குடிமக்கள் இருந்து வருகின்றனர்.
பாஜக சொல்லும் காரணம்
இதனை விரும்பாத பாஜக அரசு, இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஒன்று.. இந்திய குடிமகன்கள் எந்த மாநிலத்திலும் குடியேறி சொத்துகளை வாங்கலாம். ஜம்மு காஷ்மீரின் 35ஏ பிரிவானது அம்மாநிலத்தின் தொழிற்துறை வளர்ச்சியை பாதிக்கிறது என்பது உள்ளிட்ட அம்சங்களை முன்வைத்து அதை ரத்து செய்ய முனைகிறது. அதாவது இஸ்லாமிய பெரும்பான்மையை குறைப்பது என்பதுதான் அதன் நோக்கம்.
பதட்டம் ஏற்படும்
இந்த இரு பிரிவுகளையும் நீக்கிவிட்டால் பிற மாநிலங்களைப் போல ஜம்மு காஷ்மீரும் எந்தவித சிறப்பு உரிமையுமே இல்லாத ஒரு மாநிலமாகத்தான் இருக்கும் என்பது பாஜகவின் கணக்கு. ஆனால் இந்த இரு பிரிவுகளையும் நீக்கினால் ஜம்மு காஷ்மீர் மீண்டும் பற்றி எரியும் என அரசியல் கட்சிகள் எச்சரித்து வருகின்றன. தற்போது ராணுவம் குவிக்கப்பட்டிருப்பதன் மூலம் எத்தகு சூழல் ஏற்பட்டாலும் அதை சமாளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கருதப்படுகிறது.