இப்படியே கூட்டம் கூடினால் காதல் சின்னம் நினைவு சின்னமாகிவிடும்... ஆய்வாளர்கள் எச்சரிக்கை
ஆக்ரா: வாரவிடுமுறை நாளில் சுமார் 3 லட்சம் சுற்றுலா பயணிகள் தாஜ்மகாலில் குவிந்தனர். இதே நிலை நீடித்தால் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் சேதமடைய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கின்றனர் கட்டிட கலை நிபுணர்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை இந்திய திருநாட்டின் 68வது ஆண்டு சுதந்திர தின கொண்டாடப்பட்டது. இதையடுத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொடர்ந்து வார இறுதி நாள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் ஆக்ராவிலுள்ள தாஜ்மகாகாலை சுற்றிப்பார்க்க அக்கம்பக்கத்து மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர்.
இரு நாட்களில் சுமார் 3 லட்சம் பயணிகள் அங்கு வந்து குவிந்தனர். இதனால் தாஜ்மகாலில் அழுத்தம் ஏற்பட்டு அதன் மார்பிள் தரைக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உருவாகியது.
வரலாற்று ஆய்வாளர் நாத், இதுபற்றி கூறுகையில், தாஜ்மகாலின் அடித்தளம் எப்படி இருக்கிறது என்று பல ஆண்டுகளாக சோதிட்டு பார்க்கவில்லை. யமுனை நதியில் தண்ணீர் குறைவாக உள்ள நிலையில் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்திருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் தாஜ்மகாலின் அடித்தளத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
இதுதவிர அதிகப்படியான கூட்டம் வந்தால் கட்டிடத்தை தொட்டு பார்க்கவும் வாய்ப்பு அதிகம். இதனால் கட்டிடத்தில் கீறல்கள் விழும் வாய்ப்புள்ளது. தாஜ்மகால் சற்று இளைப்பாற நேரம் கொடுக்க வேண்டும். ஆனால் பகலிலும் போதாது என்று மாதத்தில் நான்கு நாட்கள் இரவிலும் தாஜ்மகாலை பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றார்.