ரோஹித்துக்கு நீதி கோரி போராட்டம்- ஹைதராபாத் பல்கலை. தற்காலிக துணைவேந்தரும் திடீர் 'எஸ்கேப்'
ஹைதராபாத்: தலித் ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலாவின் தற்கொலைக்கு நீதி கோரி தொடர் போராட்டங்கள் நடைபெறும் நிலையில் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தின் தற்காலிக துணைவேந்தர் விபின் ஸ்ரீவத்சவாவும் திடீரென விடுப்பில் சென்றுள்ளார்.
ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் இந்துத்துவா அமைப்பினருக்கு எதிராக செயல்பட்டதால் ரோஹித் வெமுலா உட்பட 5 மாணவர்கள் மீது பல்கலைக் கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிராக ரோஹித் உள்ளிட்டோர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இந்நிலையில் திடீரென ரோஹித் வெமுலா தற்கொலை செய்து கொண்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
ரோஹித் வெமுலாவின் தற்கொலைக்கு காரணமான மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோரை டிஸ்மிஸ் செய்ய கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதனால் துணைவேந்தர் அப்பா ராவ் திடீரென விடுப்பில் சென்றார்.
அவருக்கு பதிலாக விபின் ஸ்ரீவத்சவா தற்காலிக துணைவேந்தராக செயல்பட்டு வந்தார். இதனிடையே ரோஹித்துக்கு நீதி கோரி ஹைதராபாத் பல்கலைக் கழக மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பிற்பகலில் இருந்து தற்காலிக துணைவேந்தர் விபின் ஸ்ரீவத்சவாவும் திடீரென விடுப்பில் செல்வதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து மூத்த பேராசிரியர் எம். பரியசாமி தற்காலிக துணைவேந்தராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.