"இது" தொடர்ந்தால்.. மதரஸாக்கள் இடிக்கப்படுவதும் தொடரும்.. அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து
கவுஹாத்தி: அசாமில் மதரஸாக்கள் தொடர்ந்து இடிக்கப்பட்டு வரும் சூழலில், அம்மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
அசாமில் கடந்த மாதம் அல் கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு, முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மாவிடம் ஓர் அறிக்கையை காவல்துறை சமர்ப்பித்தது. ஆனால், அந்த அறிக்கையை அரசு பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடவில்லை.
இருந்தபோதிலும், அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட அடுத்த சில தினங்களிலேயே, அசாமின் மோரிகோன் பகுதியில் உள்ள ஒரு மதரஸா, அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாக, அசாமின் பர்பேட்டா மாவட்டத்தில் உள்ள தனியார் மதராஸா ஒன்று, அரசு நிலத்தில் சட்ட விரோதமாகக கட்டப்பட்டதாகவும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான பயிற்சி முகாமாக அது பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, அந்த மதரஸாவையும் மாவட்ட நிர்வாகத்தினர் கடந்த 29-ம் தேதி இடித்தனர். அசாம் அரசின் இந்த நடவடிக்கை இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அப்போது விளக்கம் அளித்த முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா, தீவிரவாதிகளின் மையமாக இருந்ததன் காரணமாகவே அந்த மதரஸாக்கள் இடிக்கப்பட்டதாக கூறினார்.
இந்த சூழலில், கடந்த 31-ம் தேதி போங்காய்கான் மாவட்டத்தில் உள்ள மற்றொரு மதரஸாவையும் அசாம் அரசு இடித்தது. அசாமில் இடிக்கப்ட்ட மூன்றாவது மதரஸா இதுவாகும். அசாம் அரசின் இந்த செயல்பாடுகளுக்கு காங்கிரஸ், ஏஐடியுஎப் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், முஸ்லிம் அமைப்புகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
இதனிடையே, மதரஸா இடிக்கப்பட்ட இடத்தினை ஏஐடியுஎப் கட்சியின் தலைவர் பத்ருதீன் அஜ்மல் நேற்று பார்வையிட்டார். அப்போது அவர், "அசாமில் ஆட்சிப்புரியும் பாஜக அரசு தனது புல்டோசர் கலாச்சாரத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். தேச விரோத சக்திகள் என சந்தேகம் வந்தால் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அசாம் அரசின் இந்த அராஜகம் தொடர்ந்தால் நான் நீதிமன்றத்துக்கு செல்வேன்" என அவர் கூறினார்.
இந்நிலையில், பத்ருதீனின் இந்த பேச்சு குறித்து முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மாவிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர்.அதற்கு பதிலித்த அவர், "அசாமில் உள்ள பல மதரஸாக்கள் தீவிரவாத அமைப்புகளின் கூடாரமாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. தீவிரவாத நடவடிக்கைகளுக்கு மதரஸாக்கள் பயன்படக் கூடாது என்பது மட்டுமே எங்கள் நோக்கம். தேசவிரோத நடவடிக்கைகளுக்கு மதரஸாக்கள் பயன்படுவது தொடர்ந்தால் அவை இடிக்கப்படுவதும் தொடரும்" என அவர் கூறினார்.