எங்கு பார்த்தாலும் ஷுகர்: குளிர்பானங்களில் சர்க்கரையை குறைக்க பெப்சிக்கு மத்திய அரசு கோரிக்கை
டெல்லி: இந்தியாவில் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால் பெப்சி நிறுவன பானங்களில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்குமாறு மத்திய அரசு பெப்சி நிறுவனத்தை கேட்டுக் கொண்டுள்ளது.
பெப்சி நிறுவன தலைவர் இந்திரா நூயி உணவு பதப்படுத்தும் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவ்ர் பாதலை செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினார். அப்போது அவர் பெப்சி நிறுவனத்தின் திட்டங்கள், இந்தியாவில் முதலீடு செய்வது குறித்து பாதலுடன் பேசினார்.
இந்த சந்திப்புக்கு பிறகு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தனது குளிர்பானங்களில் உள்ள சர்க்கரையின் அளவை மேலும் குறைக்குமாறு பெப்சி நிறுவனத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடுத்தர வர்க்கத்தினர் ஃபாஸ்ட் புட் சாப்பிடுவதும், குளிர்பானங்கள் குடிப்பதும் அதிகரித்துள்ளது. இதனால் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் அதிகம் ஏற்படுகிறது. ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் பெப்சி நிறுவனம் தனது தயாரிப்புகள் ஸ்டீவியா என்ற இயற்கை ஸ்வீட்னரை பயன்படுத்துகிறது. ஆனால் இந்தியாவில் ஸ்டீவியாவை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படவில்லை.
7அப், மிரிண்டா, மவுன்டெய்ன் ட்யூ ஆகியவற்றையும் இந்தியாவில் விற்கும் பெப்சி நிறுவனம் தனது தயாரிப்புகளை வரும் 2020ம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக்க திட்டமிட்டுள்ளது.