உலகிலேயே அதிகம் இணையதள சேவை முடக்கம் நடப்பது நம்ம 'டிஜிட்டல்' இந்தியாவில்தான்! காரணம் வன்முறைகள்
டெல்லி: டிஜிட்டல் இந்தியா என்று நாம் ஒருபக்கம் சொல்லிக்கொண்டாலும், உலக அளவில் அதிகப்படியான இணையதள சேவை நிறுத்தம் இந்தியாவில்தான் அரங்கேறியுள்ளது என்பது புள்ளி விவரங்களுடன் தெரியவருகிறது. போராட்டம், வன்முறை போன்றவற்றை ஒடுக்க இணையதள சேவைகள் அடிக்கடி நிறுத்தப்படுகின்றனவாம்.
இந்தியா 2014ம் ஆண்டில், ஆறு முறை இணையதள சேவை நிறுத்தங்களை கண்டது. 2015 இல் இது 14 ஆக உயர்ந்தது. 2016 ஆம் ஆண்டில் இது 31 ஆக இரு மடங்காக உயர்ந்தது.
2017 ஆம் ஆண்டில் இன்னும் மோசம். 79 முறை, இணையதள சேவை நிறுத்தம் செய்யப்பட்டது. 2018 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 134 ஆக உயர்ந்தது, 2019 டிசம்பர் 15 ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, 93 முறை, இணையதள சேவை நிறுத்தம் நடந்துள்ளது. குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பான போராட்டங்களால் இந்த வருடம் நிறைவடைவதற்குள் இது இன்னும் அதிகரிக்க கூடும்.
கலவரக்காரர்களை உடையை வைத்தே கண்டறியலாமா?.. அப்ப மோடிஜி என் உடையை வைத்து நான்யாருனு சொல்லுங்க.. மம்தா
67 சதவீதம்
இன்டர்நெட் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்ட வலைத்தளமான accessnow.com இன் தரவுகளின்படி, 2018 ஆம் ஆண்டில் உலகின், ஒட்டுமொத்த, இணையதள சேவை நிறுத்தங்களில் 67 சதவீதம் இந்தியாவில்தான் நடந்துள்ளது. 2019 ஜனவரி முதல் ஜூலை வரை அதே அமைப்பால் சேகரிக்கப்பட்ட தகவல்கள், இந்தியா தொடர்ந்து உலகின் முன்னணி இணைய நிறுத்த நாடாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
ஜம்மு காஷ்மீர்
2019 ஆம் ஆண்டில், இந்தியாவில் 93 முறை இணையம் முடக்கப்பட்டுள்ளது. இது மொத்தம் 167 பகுதிகளை பாதித்தது. இவற்றில், ஜம்மு-காஷ்மீர் அதிக எண்ணிக்கையிலான முடக்கத்தை பார்த்த பகுதி. அங்கு 53 முறை இணையதள சேவை நிறுத்தம் செய்யப்பட்டது. 93 பகுதிகளை பாதித்தது. இது மொத்த இணைய பணிநிறுத்தம் அறிவிப்புகளில் 59 சதவீதமாகும். இந்த ஆண்டு இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ள மொத்த பரப்பளவில் 56 சதவீதமும் ஆகும்.
பகுதிகள்
காஷ்மீரில் இணையதள சேவை நிறுத்தம் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, புல்வாமாவைத் தொடர்ந்து ஷோபியான் (11), குல்கம் (9), பாரமுல்லா (9), அனந்த்நாக் (8), குப்வாரா (6), ஸ்ரீநகர் (6) மற்றும் புட்கம் (5) ஆகியவை இணையதள சேவை நிறுத்தங்களை சந்தித்த பகுதிகளாகும்.
தமிழகத்திலும்
அவ்வளவு ஏன் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பொதுமக்கள் கொலை செய்யப்பட்டபோது, தென் மாவட்டங்களிலும் இணையதள சேவை ரத்து செய்யப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த வகையில், இந்த வன்முறை மற்றும் அது சார்ந்த இணையதள சேவை முடக்கம், தமிழகத்தையும் தொட்டுப் பார்த்துவிட்டது.