ஊழல் தடுப்பு, நல்ல சூழ்நிலை.. முதலீடுகளை ஈர்ப்பதில் முதலிடத்துக்கு முன்னேறியது இந்தியா!
டெல்லி: உலக அளவில் முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் 110 நாடுகளில் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா முதலிடத்துக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு 6வது இடத்திலிருந்த இந்தியா இவ்வாண்டில் இச்சாதனையை படைத்துள்ளது.
ஒரு நாட்டில் சொத்து மதிப்பு எந்த அளவுக்கு வளருகிறது, சொத்துக்களை விற்பனை செய்யும்போது அதன் நெகிழ்ச்சி தன்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் முதலீடுக்கு வசதியான நாடுகள் பட்டியலை ஃபாரின் பாலிசி மேகசீன் வெளியிட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சி மட்டுமே இந்தியாவை நோக்கி முதலீடுகளை ஈர்க்கவில்லை. நிதி ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, ஊழல் குறைந்தது, அரசின் ஒத்துழைப்பு, பங்குச்சந்தை நிலவரம் போன்ற பல்வேறு அம்சங்கள் இந்தியாவுக்கு முதலீட்டை ஈர்த்துக்கொடுத்துள்ளன.
நரேந்திரமோடி அரசில் ஊழல்கள் குறைந்துள்ளது மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகள் தொழில்துறையில் வளர்ச்சியை வேகமாக அதிகரித்து வருகிறது. மேக் இன் இந்தியா திட்டத்துடன் தொழில்களை தொடங்க எடுக்கப்படும் நடவடிக்கையும் முக்கிய பங்களித்துள்ளது.
எனவேதான் கடந்த ஆண்டு 6வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது முதலிடத்துக்கு வந்துள்ளது. கடந்தாண்டு 26வது இடத்தில் இருந்த அமெரிக்கா தற்போது 50வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது. சீனா 5 இடங்கள் பின்தங்கி 65வது இடத்தில் அமர்ந்துள்ளது. 108வது இடத்தில் இருந்த ரஷ்யா 105வதற்கு முன்னேறியுள்ளது.