நினைத்து பார்க்கவே முடியாத பாகிஸ்தான் எல்லை... நாட்டை அர்ப்பணிப்புடன் காக்கும் ராணுவ வீரர்கள்!
நம்மால் நினைத்து கூட பார்க்கவே முடியாத மனிதர்களே வாழ தகுதியற்ற ஒரு எல்லையில் நமக்காக இரவும் பகலும் கடமையாற்றுகின்றனர் ராணுவ வீரர்கள்.
பூஜ்: பாகிஸ்தானுடனான எல்லைகள் என்பது முட்கம்பிகளைக் கொண்டு பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நீண்டு விரிந்து கிடக்கும் என்பதாகவே நாம் உணருகிறோம்... ஆனால் கனவிலும் கூட நினைத்துப் பார்க்காத இந்தியா- பாகிஸ்தான் எல்லையும் இருக்கிறது.. இதை படியுங்கள் எல்லை காக்கும் நமது வீரர்களின் தியாகம் எத்தனை அளப்பரியது என உணர்வீர்.
நாட்டின் மேற்கு எல்லை மாநிலமாக் இருப்பது குஜராத். இங்கு பாகிஸ்தானுடனான எல்லை என்பது அரபிக் கடலில் பெரும்பகுதி இருக்கிறது.
அதேநேரத்தில் மற்றொரு எல்லையும் இருக்கிறது. அந்த எல்லை எப்படிப்பட்டது தெரியுமா?

நாம் வாழ்க்கையிலேயே அனுபவிக்காத
கருக்கிவிடும் திகுதிகுவென எரிக்கும் வெயில்,
தோலை உரிக்கும் உப்புக் காற்று
மூச்சை முடக்கும் புழுதிப் புயல்,
திரும்பிய திசையெங்கும் பாம்பு பட்டாளங்கள்
இவைகளை தினந்தோறும் அனுபவிக்கும் உன்னதமான வீரர்கள் நடமாடும் எல்லை அது...
கடைசி போஸ்ட் 1175.
இந்தியாவின் கடைசி போஸ்ட் 1175. குஜராத்தின் கைவிடப்பட்ட சூனிய பிரதேசமாக காட்சி தரும் கட்ச் மாவட்டதின் லக்பத்தில் இருந்து 65 கி.மீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த கடைசி போஸ்ட்.

நிலநடுக்கத்தால் இடம்பெயர்ந்த ஆறு
இந்த லக்பத் வழியாக சிந்து நதியின் கிளை நதியான கோரி ஆறு 1819-ம் ஆண்டு வரை பாய்ந்தோடிக் கொண்டிருந்தது. 1819-ல் ஏற்பட்ட படுபயங்கரமான நிலநடுக்கத்தால் கோரி ஆறே இடம்பெயர்ந்து பாகிஸ்தான் பக்கம் போய்விட்டது.

நம்ம தனுஷ்கோடி போல
அதுவரை இந்தியாவின் நுழைவு வாயிலாக திகழ்ந்த லக்பத் கோட்டை இப்போது மனிதர்கள் வாழ தகுதியற்ற பிரதேசமாக பழமையை சுமந்து கொண்டு நமது தனுஷ்கோடியைப் போல சொற்ப மனிதர்களுடன் காட்சி தருகிறது.

கல்தூண் எல்லை
இந்தியா- பாகிஸ்தானைக் குறிக்கும் சிறு கல்தூண்தான் கடைசி போஸ்ட்டான 1175. இந்த எல்லைக்கு செல்வதும் பாதுகாப்பதும் அப்படி ஒன்றும் சுலபமானது அல்ல.

ரான் ஆப் கட்ச்
ஏனெனில் சதுப்பு நிலமான ரான் ஆப் கட்ச் நடுவே இருக்கிறது இந்த எல்லை. ரான் ஆப் கட்ச் என்பது மனிதர்கள் வாழவே முடியாத பிரதேசம்.
உச்சவெயில் உயிரை குடிக்கும் குளிர்
ரான் ஆப் கட்ச் என்பது 7,505.22 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. இந்தியாவிலும் பாகிஸ்தானிலுமாக விரிந்து கிடக்கிறது. வெயில் காலத்தில் உச்சபட்ச வெப்பநிலையில் குளிர் காலத்தில் மிக மோசமான குளிரும் நிலவும் பகுதி.

தனிமை பிரதேசம்
மனிதர்கள் வாழ தகுதியற்ற சதுப்பு நிலத்தின் ஊடே மண்சாலை அமைத்து நீரிலும் நிலத்திலுமாக செல்லக் கூடிய வாகனங்களில் பயணித்துதான் நமது வீரர்கள் இந்த எல்லையை அடைய முடியும். சதுப்பு நிலத்துக்கே உரிய வனவிலங்குகளும் பறவைகளும் நடமாடும் பிரதேசம்.
பாதுகாப்புத் துறை அமைச்சர்
இந்தியாவின் எந்த ஒரு பாதுகாப்புத்துறை அமைச்சருமே வந்து பார்வையிடாத ஒரு எல்லை பிரதேசம். இப்படியான ஒரு எல்லையில் உயிரை துச்சமென மதித்து நம்மை பாதுகாக்கும் ராணுவ வீரர்களின் உன்னத தியாகத்தை நெஞ்சில் ஏற்றி போற்றுவது நமது கடமை.












Click it and Unblock the Notifications