ட்ரோன் ஊடுருவலுக்கு ஃபுல் ஸ்டாப்.. இந்திய ராணுவம் கையாளும் புதிய யுக்தி! களமிறக்கப்படும் "பருந்துகள்"
டேராடூன்: எதிரி நாட்டின் ட்ரோன்களை மடக்கி பிடிக்கும் வகையில் பருந்துகளுக்கு இந்திய ராணுவம் பயிற்சியளித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஆலியில் நடைபெற்ற இந்திய-அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சியில் பருந்துகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்து ராணுவத்தினர் செய்முறை விளக்கமளித்துள்ளனர்.
'யுத் அபயாஸ்' எனப்படும் இந்த கூட்டு ராணுவ பயிற்சியானது ஆண்டு தோறும் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு இந்தியாவின் உத்தரகாண்டில் நடைபெற்று வருகிறது.
இந்த பயிற்சியில்தான் 'அர்ஜுன்' எனும் பருந்து ட்ரோன்களை பிரமாதமாக வேட்டையாடி தனது திறனை வெளிக்காட்டியுள்ளது.
ஓபிசி இடஒதுக்கீட்டுக்கு எதிராக அன்று ர(த்)த யாத்திரை- இன்று கரிசனமா? பாஜக மீது திருமாவளவன் அட்டாக்
யுத் அபயாஸ்
'யுத் அபயாஸ்' கூட்டு பயிற்சி திட்டம் என்பது இந்திய-அமெரிக்க இடையே நடைபெறும் கூட்டு ராணுவ பயிற்சியாகும். இந்த பயிற்சியானது ஆண்டுக்கு ஒருமுறை இருநாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டில் நடைபெறுவது வழக்கம். பெரும்பாலும், பனி அதிகம் உள்ள பகுதிகளிலும், உயரமான இடங்களிலும் இவை நடைபெறும். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த பயிற்சி அமெரிக்காவில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் அவுலியில் நடைபெற்று வருகிறது. இதில், எதிரி நாட்டு ட்ரோன்களை வீழ்த்த பருந்துகளுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
பயிற்சி
இதில் ஆப்ரேஷனில் நாயும், பருந்தும் ஈடுபடுத்தப்படும். அதாவது, ட்ரோன் சத்தத்தை கேட்டு நாய் எச்சரிக்கை செய்யும். அதேபோல, பருந்து ட்ரோனை விட உயரமாக பறந்து ட்ரோனை தாக்கி வீழ்த்தும். பின்னர் தரையில் விழுந்த ட்ரோனை நாய் தேடி கண்டுபிடித்து கொண்டுவரும். ட்ரோனை வீழ்த்த பருந்துகளை பயன்படுத்துவது இதுதான் முதல்முறை என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்காக நாய்களுக்கும், பருந்துகளுக்கும் தனியாக பயிற்சி கொடுக்கப்படுகிறது. இதேபோல நாட்டின் எல்லையில் பல இடங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த ராணும் திட்டமிட்டுள்ளது. இதற்கென பருந்துகள் தனியாக வளர்க்கப்படுகின்றன.
சவாலான பகுதிகள்
மற்ற பகுதிகளை காட்டிலும், பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் அதிக அளவில் ட்ரோன் ஊடுருவல்கள் இருப்பதால் இப்பகுதியில் இந்த பருந்துகளை களமிறக்க ராணுவம் முடிவெடுத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜம்முவை எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ட்ரோன் ஒன்றை சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதில் ஆயுதங்களும், இந்திய நாணயங்களும் இருந்துள்ளன. எனவே டோரான் ஊடுருவல்கள் என்பது பாதுகாப்பு படையினருக்கு பெரும் சவாலாக இருக்கிறது. இதனை சமாளிக்க பருந்துகள் உதவும் எனவும் ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
நோக்கம்
'யுத் அபயாஸ்' மேலும் சில பயிற்சிகளை உள்ளடங்கியுள்ளது. அதாவது, ஹெலிகாப்டரிலிருந்து வீரர்கள் தரையிறங்குவது, நிராயுதபாணியாக இருக்கும் பட்சத்தில் எப்படி சண்டையிடுவது என பல்வேறு பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர். இதில் இரு நாட்டு ராணுவ தந்திரங்களும் பகிர்ந்துகொள்ளப்படும். தற்போது நடைபெற்று வரும் பயிற்சியில் அமெரிக்காவில் 11வது வான்வழிப் பிரிவின் 2வது படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்களும், இந்தியா சார்பில் அசாம் ரெஜிமென்ட் வீரர்களும் பங்கேற்றுள்ளனர். மலை பிரதேசங்களில் திறம்பட செயல்படுதல், விபத்து மீட்பு நடவடிக்கை, போர்க்குழுக்களை சரிபார்த்தல், கண்காணிப்பு கோபுரங்களை நிறுவுதல், மருத்து உதவிகளை கொண்டு சேர்த்தல் உள்ளிட்டவை இந்த பயிற்சியின் பிரதான நோக்கமாகும்.