முதலில் டிக்கெட்ட பிடிங்க...அப்புறம் கட்டணம் தாங்க.. ஐஆர்சிடிசி அதிரடி சலுகை
ஐஆர்சிடிசி யில் டிக்கெட் எடுத்த பிறகு கட்டணம் செலுத்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிக்கெட் எடுத்து 14 நாட்கள் கழித்து பயணிகள் கட்டணம் செலுத்தும் புதிய சேவை ஐஆர்டிசி அறிமுகப்படுத்தியுள்ளது.
டெல்லி: இந்திய ரயில்வே துறை 'டிக்கெட் வாங்குங்கள் பிறகு பணம் செலுத்தலாம்' என்ற புதிய சேவையை தொடங்க உள்ளது. இந்த சேவை அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கும் பொருந்தும் என்று ஐஆர்சிடிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரிகள் கூறுகையில், " இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழக இணையதளத்தில், பயணம் செய்ய விரும்பும் பயணிகள் ரயிலுக்கு உரிய டிக்கெட்டை பதிவு செய்து கொள்ளலாம். பின்னர் நீங்கள் அதற்கு உரிய பணத்தைச் செலுத்தலாம்.
இந்த சேவையைத் தேர்வு செய்ய விரும்புவோர் தங்கள் பெயர், மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண், அவர்களின் 'பான் அட்டை' அல்லது ஆதார் விவரங்களை வழங்க வேண்டும்.' என்று தெரிவித்தனர்.
மேலும் இதுதொடர்பாக ஐஆர்சிடிசி செய்தித் தொடர்பாளர் சந்தீப் தத்தா தெரிவித்த தகவலின்படி, " ஐஆர்சி டிசி நிறுவனம் மும்பையைச் சேர்ந்த இபே நிறுவனத்துடன் சேர்ந்து பணத்தை தாமதமாக கட்டலாம் என்ற புதிய சேவையை தொடங்க உள்ளது.
இந்த சேவை மூலம் பயணத்திற்கு 5 நாட்கள் முன்பாக டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம். பின்னர் அடுத்த 14 நாட்கள் கழித்து 3.5 % சர்வீஸ் கட்டணத்துடன் நீங்கள் இந்தப் பணத்தைச் செலுத்தலாம்.
இந்த சேவை இ-டிக்கெட்டுக்கு மட்டுமே பொருந்தும். படிப்படியாக இந்தத் திட்டம் விரிவு படுத்தப்படும்." என்று குறிப்பிட்டுள்ளார்.