கதிர்வீச்சு ஆயுதங்களில் இருந்து காப்பாற்றும் அதிசய சஞ்சீவனி மூலிகை
லே: இந்திய விஞ்ஞானிகள் இமயமலையில் விளையும் அதிசய மூலிகை ஒன்றினைக்கண்டுபிடித்துள்ளனர். அதனை உயிர்க்காக்கும் சஞ்சீவனி மூலிகை என்று தெரிவிக்கின்றனர்.
ராமாயணத்தில் போர்க்களத்தில் ராமரின் தம்பி லட்சுமணன் மூர்ச்சையடைந்த போது அவரது உயிரைக் காக்க அனுமார் சஞ்சீவனி மூலிகை ஒன்றை கொண்டு வந்தாராம். அது போன்றது இந்த மூலிகை ஆய்வாளர்கள் அதிசயித்துள்ளனர்.
உயிர்வாழ்வதற்கே கடினமான பகுதிகள் கொண்ட இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள இந்த அதிசய மூலிகை கதிர்வீச்சு பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றும்.
நோய் எதிர்ப்பு சக்தி
நோய் எதிர்ப்புச் சக்தியை பன்மடங்கு அதிகரித்து ஒழுங்கு படுத்துவதும், பிராண வாயு பற்றாக்குறை இருக்கும் மலைப்பிரதேசங்களில் உயிர்களைப் பாதுகாக்கவும் செய்யும் ரோடியோலா என்ற அதிசய மூலிகையின் மகத்துவங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்துவருகின்றனர்.
விஞ்ஞானிகள் ஆய்வு
இந்த ரோடியோலாவை ‘சஞ்சீவனி' என்றே கருதுகின்றனர் விஞ்ஞானிகள். சவாலான வாழ்விடச் சூழலில் மக்களை பாதுகாத்து கொள்ளும் சக்தியை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த மூலிகை தொடர்பாக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அனுமரின் சஞ்சீவனி
இந்த மூலிகை ராமாயணத்தில் லட்சுமணன் உயிரைக்காக்க அனுமார் கொண்டு வந்ததாகக் கருதப்படும் சஞ்சீவனி மூலிகை போன்று உள்ளது. என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ராமாயண காவியத்தில் சஞ்சீவனி மூலிகை உயிரினங்களுக்கு உயிர் கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவாகும் இலைகள்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பகுதியில் இந்த மூலிகை ‘சோலோ' என்று அழைக்கப்படுகிறது. லடாக்கில் உள்ள மனிதர்கள் இதன் இலைகளை உணவுப் பொருட்களாக பயன்படுத்தி வருகின்றனர்.
அரியகுணங்கள்
ரோடியோலா என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் இந்த மூலிகை உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. இந்த மூலிகையின் அரிய குணங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமலே உள்ளது.
சக்தியைத் தரும் மூலிகை
மலைப்பகுதி ஆய்வுக்கான ராணுவ அமைப்பின் விஞ்ஞானிகள் இதன் மருத்துவ குணங்களை ஆராய்ந்து வருகின்றனர். கடினமான வாழ்விடச் சூழலில் நம்மை தகவமைத்துக் கொள்வதற்கான சக்தியை வழங்குகிறது.
கதிர்வீச்சு ஆயுதங்கள்
மேலும், ரேடியோ கதிர் வீச்சு விளைவுகளில் இருந்தும் பாதுகாக்கும். என்று ஆய்வுக் கழகத்தின் இயக்குநர் ஆர்.பி.ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். ரசாயன ஆயுதங்கள், வெடிகுண்டுகள் ஆகியவை வெளிப்படுத்தும் நச்சுக் கதிரியக்கத்தின் விளைவுகளையும் இந்த மூலிகை அகற்றும்.
மனஉளைச்சலுக்கு மருந்து
மன உளைச்சல், கவலை ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணியாகவும் இருக்கும். ஜீரண சக்திகளை மேம்படுத்தும் குணங்களும் இந்த மூலிகைக்கு இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உயரமான போர்க்களம்
உலகின் மிக உயரமான போர்க்களமாக கருதப்படுவது ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் மாவட்டத்தில் உள்ள பனிசூழ்ந்த சியாச்சின் மலைப் பகுதியில் ஆகும்.
ராணுவ வீரர்களுக்கு உதவி
இந்த பகுதியை பாதுகாக்கும் பணியில் நமது ராணுவ வீரர்களுக்கு இந்த மூலிகை உதவியாக இருக்கும். ரோடியோலா மூலிகை குறித்து ஏற்கனவே பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.