ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் உதவியை நாடியதாக ஒப்புக் கொண்ட இந்திராணி
மும்பை: ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு அன்னிய முதலீடு பெறுவது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் உதவியை நாடியதாக இந்திராணி முகர்ஜி தெரிவித்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி கைது செய்யப்பட்டார். கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் மும்பை அழைத்துச் சென்றனர்.
மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் மும்பை சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜியையும், கார்த்தியையும் நேருக்கு நேர் வைத்து ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
இந்திராணி அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இந்திராணி தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,
அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் ஒப்புதல் கிடைக்காததால் நானும், என் கணவர் பீட்டரும் கார்த்தி சிதம்பரம் நிறுவனத்தின் உதவியை நாடினோம் என்றார்.
ஐ.என்.எக்ஸ். மீடியா ரூ. 305 கோடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கோர அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியமோ ரூ. 5 கோடிக்கு மட்டுமே அனுமதி அளித்தது.
அதன் பிறகு நாங்கள் செஸ் மேனேஜ்மென்ட் சர்வீஸ்(கார்த்தியின் நிறுவனம்) நிறுவனத்தின் உதவியுடன் அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்திடம் அனுமதி பெற்றோம். அதற்காக செஸ் மேனேஜ்மென்டுக்கு ரூ. 10 லட்சம் கொடுத்தோம் என்று இந்திராணி தெரிவித்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு அன்னிய முலீடுக்கான அனுமதி பெற்று தந்ததில் முறைகேடு செய்த வழக்கில் தான் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.