அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட 14 இந்திய மாணவர்கள்
ஹைதராபாத்: அமெரிக்காவுக்கு படிக்கச் சென்ற இடத்தில் இரண்டு கல்லூரிகள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டதால் 33 இந்திய மாணவர்களின் எதிர்கால கனவு கலைந்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சிலிக்கான் வேலி பல்கலைக்கழகம் மற்றும் நார்த் வெஸ்டர்ன் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவை விதிமுறைகளை மீறியதாகக் கூறி அதிகாரிகள் அதை கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளனர். இதையடுத்து அந்த பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த 14 மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, எப்.பி.ஐ. அதிகாரிகளால் 15 மணிநேரம் விசாரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
மேலும் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள அந்த கல்லூரிகளில் படிக்க ஹைதராபாத்தில் இருந்து கிளம்பிய 19 மாணவர்களை விமானத்தில் ஏற ஏர் இந்தியா அனுமதிக்கவில்லை. அமெரிக்கா சென்று கஷ்டப்படுவதை தவிர்க்கவே அந்த மாணவர்களை விமானத்தில் ஏறவிடவில்லை என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள அந்த 2 கல்லூரிகளில் படிக்க செல்லும் மாணவர்களுக்கு டிக்கெட் அளிக்க வேண்டாம் என்று ஏர் இந்தியா டிராவல் நிறுவனங்கள் மற்றும் ஏஜெண்டுகளை கேட்டுக் கொண்டுள்ளது.
நாடு கடத்தப்பட்டுள்ள மாணவர்களில் பலர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள். முன்னதாக அமெரிக்காவில் உள்ள ட்ரை வேலி பல்கலைக்கழகம் விதிமுறைகளை மீறியதால் மூடப்பட்டது. இதனால் அங்கு படித்த இந்திய மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது என்பது குறிப்பிடத்தக்கது.