காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதிதான்: வழக்கு பாய்ந்த பின் டி.ஆர்.எஸ் எம்.பி கவிதா 'பல்டி'
டெல்லி: ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்று சந்திரசேகர்ராவ் மகளும், டி.ஆர்.எஸ். எம்.பியுமான கவிதா லோக்சபாவில் கூறியுள்ளார்.
நிஜாமாபாத் தொகுதி எம்.பியான கவிதா, அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், ஜம்மு காஷ்மீரும், ஹைதராபாத்தும் இந்தியாவின் அங்கமாக சுதந்திரத்திற்கு முன்பு இருந்தது இல்லை என்றும், அவை கட்டாயப்படுத்தி இந்தியாவுடன் இணைக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், பாரதிய ஜனதாவைச் சேர்ந்த வக்கீல் கருணாசாகர் என்பவர் ஹைதராபாத்தில் உள்ள 7-வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் கவிதா மீது வழக்கு தொடர்ந்தார். அதில் அவர்,
காஷ்மீரில் சர்வதேச எல்லைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கவிதா கூறியுள்ளார். அவரது கருத்து, தேசதுரோகம் ஆகும். தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கக்கூடியது. ஆகவே, அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யுமாறு போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த புகாரை மத்தனாபேட்டை போலீசுக்கு அனுப்ப உத்தரவிட்ட மாஜிஸ்திரேட்டு, புகாரை விசாரித்து, வழக்கு பதிவு செய்யுமாறும், விசாரணை நிலவர அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் கூறினார்.
இதைப்பற்றி கேட்டபோது, மத்தனாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.பி.வி.ராஜு, நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்த பிறகு, வழக்கு பதிவு செய்யப்படும் என்று கூறினார். அதன்படி, தேசநலனுக்கு எதிராக கருத்து கூறியதாக, நேற்று மாலை கவிதா மீது, 123ஏ, 153பி, 505 ஆகிய பிரிவுகளின் கீழ், ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் இந்தக் கருத்துக்காக பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே லோக்சபாவில் நேற்று பேசிய கவிதா, ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்று கூறியுள்ளார்.