கோர்ட் நேரத்தை வீணடிக்காதீர்கள்-ஜெ. வக்கீலுக்கு நீதிபதி கண்டிப்பு! நாளை சசிகலா தரப்பு வாதம் தொடக்கம்
பெங்களூரு: கோர்ட் நேரத்தை வீணடிப்பதாக ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரை பெங்களூரு ஹைகோர்ட் நீதிபதி கண்டித்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளியாக தீர்ப்பு வழங்கியது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம். இதை எதிர்த்து ஜெயலலிதா மற்றும் சக குற்றவாளிகள் 3 பேர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணை கர்நாடக ஹைகோர்ட் சிறப்பு அமர்வு முன்னிலையில் நடந்துவருகிறது.
வழக்கின் ஏ-1 குற்றவாளி ஜெயலலிதா என்பதால், முதலில் அவரது தரப்பு வாதிட அனுமதிக்கப்பட்டது. வழக்கின் ஆரம்பத்தில் ஜெயலிலதாவுக்காக வக்கீல் குமார் ஆஜரானார். பிறகு மூத்த வக்கீல் நாகேஸ்வரராவ் வாதாடினார். கடந்த சனிக்கிழமை 8வது நாள் வாதத்தை நாகேஸ்வரராவ் முன்வைத்தார். மொத்தத்தில் அது 13வது நாள் வாதமாகும். அத்தோடு ஜெயலலிதா தரப்பு வாதம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இன்று ஏ-2 குற்றவாளி சசிகலா தரப்பு வாதத்தை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வக்கீல் குமார், ஜெயலலிதா தரப்பில் இன்றும் வாதிட தனக்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நாகேஸ்வரராவ் வாதிட்டபோது சில விவரங்கள் விடுபட்டுவிட்டதாகவும், அதை சொல்லி முடிக்க வாய்ப்பு தரும்படியும் குமார் கேட்டார்.
ஜெயலலிதா வழக்கறிஞர் கோரிக்கையை நீதிபதி குமாரசாமி ஏற்றுக் கொண்டு வாதிட அனுமதித்தார். அப்போது வாதத்தை முன்வைத்த குமார், ஏற்கனவே நாகேஸ்வரராவ் கூறிய பல வாதங்களையே மீண்டும் முன்வைக்க ஆரம்பித்தார். குறிப்பாக, ஹைதராபாத்திலுள்ள திராட்சை தோட்டம், நமது எம்ஜிஆர் பத்திரிகையில் ஜெயலலிதாவுக்கு இருந்த பங்கு உள்ளிட்டவை குறித்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் கூடுதலாக மதிப்பிட்டுவிட்டதாக குமார் கூறினார்.
இதனால் நீதிபதி குமாரசாமி அதிருப்தியடைந்தார். இந்த பாயிண்டுகளை ஏற்கனவே நாகேஸ்வரராவ் கூறிவிட்டார். கோர்ட்டின் நேரத்தை வீணாக்காதீர்கள் என்று குமாரை கண்டித்தார். இதைத் தொடர்ந்து வாதத்தை முன்வைத்த, குமார், ஜெயலலிதா பங்குதாரராக இருந்த நிறுவனங்களில், அவர் மட்டுமே பங்குதாரர் கிடையாது. வேறு பலரும் பங்குதாரர்களாக இருந்தனர் என்றும் தெரிவித்தார்.
இன்று நாள் முழுக்க குமார் தனது வாதத்தை முன்வைத்த நிலையில், ஜெயலலிதா தரப்பு வாதம் 14வது நாளான இன்று நிறைவடைந்தது. நாளை சசிகலா தரப்பு வாதத்தை தொடங்க உள்ளது.